காவிரி, அமராவதி ஆறுகளில் 3 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்


காவிரி, அமராவதி ஆறுகளில் 3 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 Nov 2019 10:00 PM GMT (Updated: 26 Nov 2019 8:27 PM GMT)

காவிரி, அமராவதி ஆறுகளில் 3 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூர், 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். மண்டல இளைஞரணி செயலாளர் விக்னேஸ்வரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு ஆயத்தமாவது மற்றும் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது. கரூர் மனோகரா கார்னரில் தினமும் காலை, மாலை வேளைகளில் அதிகபடியான வாகனங்கள் சென்று வருகின்றன. அப்போது கரூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வரும் பஸ்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதால் மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே, கரூர் புறநகரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.

மேலும், வீரராக்கியத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். வெள்ளியணை ரெயில்வே பாலத்திற்கு கீழ் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும். கோயம்பள்ளி-மேலப்பாளையம் இடையே அமராவதி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு இணைப்பு சாலை போடப்படாமல் உள்ளது. எனவே, அந்த பணிகளை விரைந்து முடித்து பாலத்தினை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

காவிரி, அமராவதி ஆறுகளில் 3 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மண்டல விவசாய அணி செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் சதீ‌‌ஷ் குமார், தலைமை நிலைய செயலாளர் தங்கமணி, மாவட்ட நிர்வாகிகள் அமுதவேல், கருப்பசாமி, பழனிசாமி மற்றும் ஒன்றிய செயலாளர்கள் சரவணன், பாஸ்கர், சுரேந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story