கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை - கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர கண்காணிப்பு


கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை - கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 26 Nov 2019 11:15 PM GMT (Updated: 26 Nov 2019 10:29 PM GMT)

கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 'சவுகாச்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி,

மும்பையில் தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி ஓட்டலில் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் நவம்பர் 26-ந்தேதி நடைபெற்றது.

இதையொட்டி தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் விதமாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் குமரி கடல் பகுதியில் 'சவுகாச்' என்ற பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

இந்த பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை 6 மணிக்கு தொடங்கி இன்று (புதன்கிழமை) காலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி நேற்று காலை கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான போலீசார் ஒரு அதிநவீன படகில் சின்னமுட்டத்தில் இருந்து கூடங்குளம் வரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மற்றொரு படகில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் சின்னமுட்டத்தில் இருந்து நீரோடி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்தனர். மேலும், சந்ேதகப்படும் வகையில் படகுகள் கண்டால் உடனே, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் கூறினர்.

இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் சுடலைமணி தலைமையிலான போலீசார் கடற்கரை மணலில் ஓடும் நவீன ஜீப் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சொந்தமான 11 சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையும், 48 கடற்கரை கிராமங்களிலும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Next Story