வலங்கைமானில் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு பணிகள் தீவிரம்


வலங்கைமானில் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 27 Nov 2019 10:30 PM GMT (Updated: 27 Nov 2019 6:55 PM GMT)

வலங்கைமானில் சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளான். அவனுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வலங்கைமான் பகுதியில் நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதர் சன்னதி தெருவை சேர்ந்தவர் அருண். இவருடைய மகன் அஸ்வின் (வயது5) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அஸ்வினை அவனுடைய பெற்றோர் வலங்கைமான் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் அவன் மேல்சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அஸ்வினுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறுவனுக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரூ.500 அபராதம்

சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததை தொடர்ந்து ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ராகவி, கணே‌‌ஷ், சுகாதார மேற்பார்வையாளர்கள் திலகவதி, எட்வர்ட், கோபு ஆகியோர் வலங்கைமான் பகுதியில் வேறு யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர். இதையொட்டி நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை வலங்கைமான் பேரூராட்சி செயல் அதிகாரி சமயசந்திரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

நோய் தடுப்பு பணிகளையொட்டி சுகாதார கேடு விளைவிக்கும் விதமாக சுற்றுப்புறத்தை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது.


Next Story