கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 27 Nov 2019 10:30 PM GMT (Updated: 27 Nov 2019 7:31 PM GMT)

கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பூந்தமல்லி, 

சென்னை மதுரவாயல், மேட்டுக்குப்பம் ரோடு, மதுரை நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ்வரராவ். ஒப்பந்தமுறையில் டைல்ஸ் கற்கள் பதிக்கும் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பாக்யலட்சுமி. ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகன் வெங்கட்ராஜ் (வயது 22). இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தனர். கதவு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, தங்கள் மகன் வெங்கட்ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மதுரவாயல் போலீசார், வெங்கட்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மகேஷ்வரராவ்-பாக்யலட்சுமி தம்பதிக்கு குழந்தை இல்லாததால் உறவினர் மகனான வெங்கட்ராஜை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

கடந்த சில தினங்களாக வெங்கட்ராஜ் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்து உள்ளார். தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் அவர், “எனக்கு வாழ விருப்பமில்லை” என்றும், “எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என்றும் எழுதி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கட்ராஜ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர் மெகபூர் ரகுமான் (30). கடந்த சில தினங்களுக்கு முன்பு நரம்பியல் சம்பந்தமான சிகிச்சை பெற சென்னை வந்த அவர், போரூர் தெள்ளியார் அகரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று முன்தினம் இரவு அவர் தங்கி இருந்த வீட்டில் மெகபூர் ரகுமான் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து, மெகபூர் ரகுமான் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்.

Next Story