ஜவுளிப்பூங்கா அமைப்பதற்கான நிபந்தனைகள் குறித்து விசைத்தறி உரிமையாளர்களுடன் கலெக்டர் ஆலோசனை


ஜவுளிப்பூங்கா அமைப்பதற்கான நிபந்தனைகள் குறித்து விசைத்தறி உரிமையாளர்களுடன் கலெக்டர் ஆலோசனை
x
தினத்தந்தி 28 Nov 2019 11:00 PM GMT (Updated: 28 Nov 2019 10:27 PM GMT)

ஜவுளிப்பூங்கா அமைப்பதற்கான நிபந்தனைகள் குறித்து விசைத்தறி உரிமையாளர்களுடன் கலெக்டர் ராமன் ஆலோசனை நடத்தினார்.

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில், சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைப்பதற்கான நிபந்தனைகள் குறித்து விசைத்தறி உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:- சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்களைஅமைக்கவும், உட்கட்டமைப்பிற்கான செலவின தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.2 கோடியே 50 லட்சம் என இதில் எது குறைவோ அதனை மாநில அரசு மானியமாக வழங்குகிறது.

இதற்கு ஒவ்வொரு சிறிய ஜவுளி பூங்காவும் ஒருசிறப்பு நோக்க முகமையை பதிவு செய்திருக்க வேண்டும். முதலீட்டாளர்கள் சிறப்பு நோக்க முகமையில் அங்கம் வகிக்கவும், அதற்கான தனது பங்கினை அளிக்கவும் எழுத்து மூலமாக விருப்பம் தெரிவித்தல் வேண்டும். ஜவுளிப்பூங்கா 3 தொழிற்கூடங்களுடன் குறைந்தபட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும்.

உட்கட்டமைப்பு வசதி

நிலமானது சிறப்பு நோக்க முகமை பெயரில் பதிவு செய்திருக்க வேண்டும். நிலம், தொழிற்சாலை கட்டிடம், எந்திரம் மற்றும் தளவாடங்களுக்கு செய்யப்படும் முதலீடானது, உட்கட்டமைப்பு வசதிக்கு செலவிடப்படும். முதலீட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக இருத்தல் வேண்டும். சிறப்பு நோக்க முகமையில் அரசின் பிரதிநிதி ஒருவர் இடம் பெற்றிருக்க வேண்டும். பூங்காவின் பெயரில் தேசிய வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். மானியம் மூன்று தவணைகளில் விடுவிக்கப்படும். சிறப்பு நோக்க முகமை ஒவ்வொரு முறையும், மானியம் விடுவிக்க கோரிக்கை சமர்ப்பிக்கும் போது தொடர்புடைய ஆவணங்கள், ரசீதுகள், ஒப்பந்த பத்திரங்கள் உடன் சமர்ப்பிக்கவேண்டும்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

மாநில அரசு விடுவிக்கும் மானியத்திற்கு சிறப்பு நோக்க முகமை தனியான கணக்கினை மேற்கொள்ள வேண்டும். இந்த கணக்கானது அரசின் தணிக்கை துறையினரால் தணிக்கை செய்யப்படும். திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும் ஜவுளிப்பூங்காவின் முன்னேற்றம் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குனர் தொடர்ந்து கண்காணித்து வருவார். இதன் காரணமாக அதிக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். உற்பத்தி செய்யும் ரகங்களை ஏற்றுமதி செய்யலாம். சிறிய விசைத்தறியாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உதவிகரமாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் துணை இயக்குனர் (கைத்தறி) சங்கரேஸ்வரி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவக் குமார், கைத்தறி அலுவலர்கள் ரமே‌‌ஷ், மரகதம், சேலம் விசைத்தறி தொழிற்சங்கம் மற்றும் ஜவுளி தொழில் உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story