கள்ளத்தொடர்பை கைவிடக்கூறிய லாரி டிரைவருக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது


கள்ளத்தொடர்பை கைவிடக்கூறிய லாரி டிரைவருக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 Nov 2019 10:45 PM GMT (Updated: 29 Nov 2019 5:29 PM GMT)

பரப்பாடியில் தனது மனைவியுடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறிய லாரி டிரைவருக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இட்டமொழி, 

நெல்லை மாவட்டம் பரப்பாடி இலங்குளத்தை சேர்ந்தவர் சரவணபெருமாள் (வயது 29). இவர் திசையன்விளையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி தேவிகா (27). தேவிகா கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கும், அங்கு வேலை பார்த்த தென்காசி அருகே உள்ள வெள்ளிகுளத்தை சேர்ந்த கொம்பையாவுக்கும் (34) இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

2 பேரும் பலமுறை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தேவிகா, தனது கணவருடன் இலங்குளத்திற்கு வந்து விட்டார். அதன் பின்னரும் தேவிகா, கொம்பையாவுடனான பழக்கத்தை விடவில்லை. இதனை அறிந்த சரவணபெருமாள், தேவிகாவை கண்டித்தார். இதில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே தேவிகா இதுகுறித்து கொம்பையாவிடம் கூறினார்.

இதில் ஆத்திரமடைந்த கொம்பையா, சரவணபெருமாளின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு தேவிகாவுடன் இருந்த ஆபாச படங்கள் மற்றும் வீடியோவை அனுப்பினார். மேலும் கொம்பையா, சரவணபெருமாளை செல்போனில் தொடர்பு கொண்டு தகராறில் ஈடுபட்டார்.

அப்போது சரவணபெருமாள், கொம்பையாவிடம் தனது மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறினார். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது. மேலும் சரவணபெருமாளுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். உடனே சரவணபெருமாள் இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து, கொம்பையாவை கைது செய்தார்.

Next Story