பாலக்கோடு அருகே பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் பணி இடைநீக்கம்


பாலக்கோடு அருகே பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 29 Nov 2019 11:15 PM GMT (Updated: 29 Nov 2019 7:53 PM GMT)

பாலக்கோடு அருகே பள்ளி மாணவிகளிடம் சில்மி‌‌ஷம் செய்த ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிச்சந்தை கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 90 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு கணித ஆசிரியராக பிரகா‌‌ஷ்குமார் (54) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், பள்ளி வகுப்பறையில் 2 மாணவிகளிடம் சில்மி‌‌ஷத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதில் ஒரு மாணவியிடம் ஆசிரியர் தொடர்ந்து சில்மி‌‌ஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதுகுறித்து அந்த மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமி சுந்தரி மற்றும் வட்டார கல்வி அலுவலர் உமாராணி ஆகியோரிடம் புகார் அளித்தனர். ஆனால் ஆசிரியர் பிரகா‌‌ஷ்குமார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புகாருக்குள்ளான ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசார் மற்றும் கல்வி அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் பாலக்கோடு மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல், வட்டார கல்வி அலுவலர் உமாராணி மற்றும் போலீசார் பள்ளிக் கூடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பெற்றோர், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து பாலக்கோடு மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் விசாரணை அறிக்கையை தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணனிடம் அளித்தார். இதை தொடர்ந்து ஆசிரியர் பிரகாஷ் குமாரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

மேலும் வட்டார கல்வி அலுவலர் உமாராணி ஏற்கனவே நடத்திய விசாரணை ெதாடர்பாக விளக்கம் அளிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Next Story