பவானி அருகே பரபரப்பு: மின்வாரிய அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


பவானி அருகே பரபரப்பு: மின்வாரிய அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 30 Nov 2019 10:45 PM GMT (Updated: 30 Nov 2019 3:54 PM GMT)

பவானி அருகே மின்வாரிய அதிகாரி வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பவானி, 

பவானி அருகே உள்ள லட்சுமி நகர் ஈ.பி.காலனியை சேர்ந்தவர் சையத்சாகர் (வயது 53). பெருந்துறை மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை சையத்சாகர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

பின்னர் நேற்று அதிகாலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே பதறி அடித்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தார். உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன.

மேலும் பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் 5 பவுன் நகைகள் மாயமாகி இருந்தன. யாரோ மர்ம நபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார்கள். பின்னர் பீரோவையும் உடைத்து பணம், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள்.

இதுகுறித்து சையத்சாகர் சித்தோடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை தொடங்கினார்கள். மேலும் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மின்வாரிய அதிகாரி வீட்டில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story