கோயம்பேடு பஸ் நிலையத்தில் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த தோழி கைது


கோயம்பேடு பஸ் நிலையத்தில் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த தோழி கைது
x
தினத்தந்தி 30 Nov 2019 11:00 PM GMT (Updated: 30 Nov 2019 7:05 PM GMT)

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இளம்பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்த அவருடைய தோழியை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி, 

சென்னை கொடுங்கையூர் வேம்புலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மனைவி முனியம்மாள்(வயது 26). இவர், நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள நடைமேடையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவருடைய தோழி பிரியா(22) என்பவரும் அங்கு வந்தார். திடீரென இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரியா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முனியம்மாளின் கழுத்தை அறுத்தார். ரத்தம் கொட்டியதால் வலியால் அலறி துடித்த முனியம்மாளை அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த கோயம்பேடு போலீசார், பிரியாவை கைது செய்து விசாரித்தனர். தோழிகளான முனியம்மாள், பிரியா இருவரும் சேர்ந்து கோயம்பேடு பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும், முனியம்மாளின் கணவருடன் பிரியாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும் கூறப் படுகிறது.

இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. எனவே இது தொடர்பான தகராறில் ஈடுபட்டபோது ஆத்திரத்தில் முனியம்மாள் கழுத்தை பிரியா அறுத்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இளம்பெண்ணின் கழுத்தை அவரது தோழியே கத்தியால் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story