பண்ருட்டி அருகே லாரி உரிமையாளர் வி‌‌ஷம் குடித்து தற்கொலை


பண்ருட்டி அருகே லாரி உரிமையாளர் வி‌‌ஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 30 Nov 2019 10:45 PM GMT (Updated: 30 Nov 2019 7:48 PM GMT)

பண்ருட்டி அருகே லாரி உரிமையாளர் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பண்ருட்டி, 

பண்ருட்டி அருகே உள்ள சீரங்குப்பத்தை சேர்ந்தவர் கலையரசன் (வயது 33). இவர் தனது வீட்டு பத்திரத்தை பண்ருட்டியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து கடன் பெற்றார். பின்னர் அவர் அந்த பணத்தை கொண்டு, லாரி வாங்கி ஓட்டி வந்தார். இந்த நிலையில் கலையரசன், தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்கு கடந்த சில மாதங்களாக தவணை செலுத்தவில்லை என தெரிகிறது.

இதனால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் நேற்று முன்தினம் கலையரசன் வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்கள் தவணை தொகையை சரியாக கட்டவில்லை எனில், லாரியை பறிமுதல் செய்துவிடுவோம் என்று கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி இவர் சிலரிடம் கடன் வாங்கி இருந்தார். அந்த பணத்தை திருப்பி கேட்டு, அவர்கள் தொல்லை கொடுத்துள்ளனர். இதில் மனமுடைந்த அவர், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி அவர் அதே பகுதியில் உள்ள தனது நிலத்துக்கு சென்றார். அங்கு கலையரசன் வி‌‌ஷத்தை குடித்து விட்டார். இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கலையரசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கலையரசன் மனைவி மாலதி காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story