மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி கொட்டும் மழையில் வவுச்சர் ஊழியர்கள் 7½ மணி நேரம் போராட்டம்


மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி கொட்டும் மழையில் வவுச்சர் ஊழியர்கள் 7½ மணி நேரம் போராட்டம்
x
தினத்தந்தி 30 Nov 2019 11:15 PM GMT (Updated: 30 Nov 2019 9:16 PM GMT)

புதுவையில் வவுச்சர் ஊழியர்கள் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி நின்று கொட்டும் மழையில் 7½ மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

புதுவை அரசு பொதுப்பணித்துறையில் பணியாற்றும் 1,311 வவுச்சர் ஊழியர்கள் 30 நாட்கள் பணி வழங்க வேண்டும், மத்திய அரசின் சட்டக்கூலியை ரூ.648 வழங்க வேண்டும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25-ந்தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது முதல் அமைச்சர் நாராயணசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமை செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வவுச்சர் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து ஒருவாரத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

தண்ணீர் தொட்டியில் ஏறினர்

இதை ஏற்று வவுச்சர் ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக விலக்கி கொண்டனர். இந்தநிலையில் வவுச்சர் ஊழியர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணிக்கு வரவேண்டாம் என தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே புதுவை ரெயில் நிலையம் அருகே சோனாம்பாளையத்தில் உள்ள பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்டத்திற்கு சொந்தமான மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது நேற்று மாலை 4 மணியளவில் வவுச்சர் ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திடீரென ஏறினார்கள். அங்கு அவர்கள் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற கோரியும், அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார்கள்.

அதிகாரிகள் வேண்டுகோள்

இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை வாகனங்கள் அங்கு கொண்டு வரப்பட்டன. பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம், செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன், மோகன்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அறிவுச்செல்வம், ஜெய்சங்கர், சண்முகம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கீழே இறங்கி வருமாறு வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு வவுச்சர் ஊழியர்கள் மறுத்து துறை அமைச்சர் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

கொட்டும் மழையில் போராட்டம்

அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் செல்போன் வெளிச்சத்தில் தண்ணீர் தொட்டியில் இருந்தபடி போராட்டத்தை தொடர்ந்தனர். மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் இரவு 11.30 மணி வரை நீடித்தது. இந்தநிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் அங்கு வந்தனர். அதிகாரிகளுடனும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர். சுமார் 7½ மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

காரைக்கால்

இதேபோல் காரைக்கால் திருநள்ளாறு பகுதியில் உள்ள நீர்தேக்க தொட்டி மீது ஏறி நின்று வவுச்சர் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் நடந்த இந்த போராட்டங்களால் மேலும் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story