திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 1 Dec 2019 10:00 PM GMT (Updated: 1 Dec 2019 3:23 PM GMT)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி நகரமே விழாக்கோலம் பூண்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை காண உள்ளூர் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சாமி, அம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.

கொடியேற்றத்தை காண பக்தர்கள் அதிகாலை 4 மணி முதல் கோவிலில் குவிய தொடங்கிய வண்ணம் இருந்தனர். கோவிலில் உள்ள தங்க கொடிமரத்துக்கும், விநாயகர், முருகர், அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் பஞ்சமூர்த்திகள், சிறப்பு அலங்காரத்தில் தங்க கொடிமரத்தின் அருகே எழுந்தருளினர்.

அதைத்தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத தங்ககொடி மரத்தில் காலை 6.15 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. அப்போது கோவிலில் குவிந்திருந்த பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்தி கோ‌‌ஷம் எழுப்பினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக நேற்று அதிகாலையில் இருந்து மழை பெய்து கொண்டே இருந்தது. ஆனால் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கொடியேற்றத்தை காண கோவிலுக்கு வந்திருந்தனர். சிலர் மழையில் நனைந்த படியும், சிலர் கையில் குடை பிடித்தப்படியும் கொடியேற்றத்தை கண்டு தரிசனம் செய்தனர்.

கொடியேற்றத்தை தொடர்ந்து காலை 11 மணி அளவில் பஞ்சமூர்த்திகள் ராஜகோபுரத்தின் முன்பு இருந்து தொடங்கி வீதிஉலா நடைபெற்றது. நிகழ்வின்போது வெள்ளி விமானத்தில் அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமலை அம்மனும், பராசக்தி அம்மனும், மர விமானங்களில் விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவின்போது மாட வீதிகளில் வசிப்பவர்கள்தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர்.

இதேபோல் இரவில் பஞ்சமூர்த்திகள் மு‌ஷிகம், மயில், வெள்ளி அதிகார நந்தி, அம்ச, சிம்ம வாகனங்களில் வீதி உலா வந்தனர். சாமி வீதியுலாவின் போது துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழா நாட்களில் தொடர்ந்து தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் வெவ்வேறு வாகனங்களில் நடக்கிறது.

தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் 63 நாயன்மார்கள் வீதிஉலா வருகிற 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை நடக்கிறது. இரவு வெள்ளி ரதம் வீதிஉலா நடக்கிறது.

மறுநாள் 7-ந் தேதி (சனிக்கிழமை) மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடக்கிறது. காலை 7.05 மணிக்கு மேல் 8.05 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது. முதலில் விநாயகர் தேரும், அடுத்து முருகர் தேரும் இழுக்கப்படுகிறது. தொடர்ந்து பெரிய தேர் இழுக்கப்படும்.ஆண்கள் ஒருபுறமும், பெண்கள் ஒருபுறமும் நின்று தேரை இழுப்பார்கள். பெரிய தேர் நிலைக்கு வந்ததும், இரவில் அம்மன் தேர் இழுக்கப்படும். அந்த தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். அதைத் தொடர்ந்து சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும்.

இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஏற்றப்படுகிறது. அன்று காலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது.

முன்னதாக தங்க விமானங்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, அர்த்தநாரீஸ்வரர் காட்சிதர மலை உச்சியில் மகா தீபம் ஏற்படும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள் நகர் ராஜன், திருவண்ணாமலை நகர கூட்டுறவு வங்கி தலைவர் குணசேகரன், அ.தி.மு.க. நகர செயலாளர் செல்வம், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் கோவிலில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story