மொபட்-மோட்டார் சைக்கிள் மோதல்: ஓய்வு பெற்ற பள்ளிக்கூட ஆசிரியர் பலி


மொபட்-மோட்டார் சைக்கிள் மோதல்: ஓய்வு பெற்ற பள்ளிக்கூட ஆசிரியர் பலி
x
தினத்தந்தி 1 Dec 2019 10:30 PM GMT (Updated: 1 Dec 2019 6:48 PM GMT)

விளாத்திகுளம் அருகே மொபட்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் ஓய்வு பெற்ற பள்ளிக்கூட ஆசிரியர் பலியானார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

விளாத்திகுளம், 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோவில்குமரெட்டியாபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா (வயது 64). ஓய்வு பெற்ற அரசு பள்ளிக்கூட ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது மொபட்டில் நாகலாபுரத்திற்கு சென்றார். பின்னர் அங்கு இருந்து மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

விளாத்திகுளம் அருகே உள்ள கீழகல்லூரணி பஸ் நிறுத்தம் அருகே அவர் வந்த போது எதிரே அதே பகுதியை சேர்ந்த முனியசாமி என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

கண் இமைக்கும் நேரத்தில் மொபட்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பையா படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று படுகாயம் அடைந்த சுப்பையாவை மீட்டு சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுப்பையா பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்து சங்கரலிங்கபுரம் போலீசார், முனியசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிர் இழந்த சுப்பையாவிற்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். விளாத்திகுளம் அருகே விபத்தில் ஓய்வு பெற்ற பள்ளிக்கூட ஆசிரியர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story