‘இந்துத்வா'வை ஒருபோதும் கைவிட மாட்டேன் - சட்டசபையில் உத்தவ் தாக்கரே பரபரப்பு பேச்சு
‘இந்துத்வா'வை ஒருபோதும் கைவிட மாட்டேன் என சட்டசபையில் உத்தவ் தாக்கரே பேசினார்.
மும்பை,
மராட்டியத்தில் தீவிர இந்துத்வா கொள்கையை கடைபிடித்து வரும் சிவசேனா, மதசார்பற்ற கொள்கையை கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்து உள்ளது.
இந்தநிலையில், நேற்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பாரதீய ஜனதாவின் தேவேந்திர பட்னாவிசுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பட்னாவிஸ் என்னுடைய நண்பர். நாங்கள் நீண்ட காலமாக நல்ல நண்பர்களாக இருந்தோம் என்பதை ஒப்புக்கொள்ள நான் தயங்க மாட்டேன்.
நான் பட்னாவிசிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். எப்போதும் அவருடன் நட்பாக இருப்பேன். அவரை எதிர்க்கட்சி தலைவர் என நான் அழைக்க மாட்டேன். அவர் பொறுப்பான தலைவர்.
நான் இன்னும் ‘இந்துத்வா' சித்தாந்தத்துடன் தான் இருக்கிறேன். வாக்குறுதியை காப்பது எனது இந்துத்வத்தின் ஒரு பகுதியாகும். நான் நேற்றும், இன்றும் இந்துத்வாவை பின்பற்றி வருகிறேன், எதிர்காலத்திலும் இதைத் தொடருவேன். அதை ஒருபோதும் விட்டு விட மாட்டேன்.
என்னிடம் இருந்து இந்துத்வாவை பிரித்து விடவும் முடியாது. கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒருபோதும் நான் பாரதீய ஜனதாவுக்கு துரோகம் செய்யவில்லை
நான் திரும்பி வருவேன் என்று ஒருபோதும் கூறியதில்லை. ஆனால் நான் சட்டசபைக்கு வந்து இருக்கிறேன். பல ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தவர்கள் ஆட்சி அமைப்பதற்காக என்னுடன் சேர்ந்து விட்டார்கள்.
அதே நேரம் நண்பர்களாக இருந்தவர்கள் இந்த சபையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர சென்றுவிட்டனர்.
நீங்கள்(பா.ஜனதா) எங்கள் பேச்சை கேட்டு இணக்கமாக இருந்துஇருந்தால், இது எதுவும் நடந்து இருக்காது. இன்று நடப்பதை நான் வீட்டில் இருந்து டி.வி.யில் பார்த்து கொண்டு இருந்து இருப்பேன்.
நான் நள்ளிரவில் எதையும் செய்ய மாட்டேன் என இந்த சபைக்கும், மராட்டிய மக்களுக்கும் உறுதி அளிக்கிறேன்.
நான் மக்களின் நலனுக்காக செயல்படுவேன். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது மட்டும் இந்த அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. அவர்களின் துயரங்களையும் துடைக்க வேண்டும் என்பது தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-
பாரதீய ஜனதா ஆட்சி அமைப்பதற்கு தான் தேர்தலில் மக்கள் தீர்ப்பு அளித்தனர். ஆனால் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் ஆட்சி அமைத்து விட்டனர்.
இதை ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். நான் திரும்பி வருவேன் என்று சொன்னேன். ஆனால் அதற்கான நேரத்தை சொல்ல மறந்துவிட்டேன். கடந்த 5 ஆண்டுகளில் நான் பல்வேறு திட்டங்களை அறிவித்தது மட்டுமின்றி அதற்கான பணிகளையும் தொடங்கி வைத்து உள்ளேன். மற்ற திட்டங்களையும் நான் தொடங்கி வைக்க வரலாம். அதற்கு நீங்கள் சிலகாலம் காத்திருக்க வேண்டும்.
இவ்வாறுஅவர் பேசினார்.
Related Tags :
Next Story