கல்வராயன்மலையில் கனமழை: கச்சிராயப்பாளையம்-வெள்ளிமலை சாலையில் 2 இடங்களில் மண் சரிவு


கல்வராயன்மலையில் கனமழை: கச்சிராயப்பாளையம்-வெள்ளிமலை சாலையில் 2 இடங்களில் மண் சரிவு
x
தினத்தந்தி 1 Dec 2019 10:45 PM GMT (Updated: 2 Dec 2019 12:49 PM GMT)

கல்வராயன்மலையில் பெய்த கனமழையால் கச்சிராயப்பாளையம் -வெள்ளிமலை சாலையில் 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் 30 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியாக கல்வராயன்மலை உள்ளது. இந்த மலையில் 171 கிராமங்கள் உள்ளன. இந்த மலையின் ஒரு பகுதியில் வசித்து வரும் வெள்ளிமலை, கரியாலூர், மேல்பரிகம், மடப்பட்டு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள கச்சிராயப்பாளையம் வழியாக கள்ளக்குறிச்சிக்கு சென்று வருகின்றனர். இதேபோல் மற்றொரு பகுதியில் உள்ள சேராப்பட்டு, மூலக்காடு, கிளாக்காடு உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சங்கராபுரத்துக்கு சென்று வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 16-ந்தேதி தொடங்கிய நாளில் இருந்து கல்வராயன்மலையில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கல்வராயன்மலை பகுதியில் கன மழை பெய்தது. இந்த மழை நேற்று அதிகாலை 4 மணி வரை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.

மேலும் கல்வராயன்மலையில் 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. அதாவது கச்சிராயப்பாளையம் -வெள்ளிமலை செல்லும் சாலையில் மேல்பரிகம், குண்டியாநத்தம் ஆகிய 2 இடங்களில் பெரிய, பெரிய கற்கள், பாறைகள் விழுந்தன. இதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக குண்டியாநத்தம், மேல்பரிகம், மாவடிப்பட்டு, மொட்டையனூர், வெள்ளிமாலை உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி கொள்ள கள்ளக்குறிச்சிக்கு செல்ல முடியாமல் பெரும் அவதி அடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் நீதிதேவன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, 2 இடங்களில் சரிந்து கிடந்த மண் மற்றும் சிறிய பாறைகள் அகற்றப்பட்டது. ஆனால் பெரிய பாறைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்ற முடியவில்லை. எனவே தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த பாறைகள் உளி மூலம் உடைத்து அகற்றப்பட்டது. அதன் பின்னர் காலை 11 மணிக்கு போக்குவரத்து தொடங்கப்பட்டது. கல்வராயன்மலையில் பெய்த கனமழையால் கடந்த அக்டோபர் மாதம் 20-ந்தேதி சேராப்பட்டு-சங்கராபுரம் சாலையில் 4 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story