துவாக்குடியில் கார் மோதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி அரசு மரியாதையுடன் உடல் தகனம்


துவாக்குடியில் கார் மோதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி அரசு மரியாதையுடன் உடல் தகனம்
x
தினத்தந்தி 1 Dec 2019 11:00 PM GMT (Updated: 1 Dec 2019 8:46 PM GMT)

துவாக்குடியில் கார் மோதியதில் படுகாயமடைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார். அவரது உடல், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

துவாக்குடி,

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காமராஜபுரம் காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் ஜெயக்குமார்(வயது 58). இவர் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ரத்தினம்(49). இவர்களுக்கு பவித்ரா(25), ஐஸ்வர்யா(24), அக்சயா(19)ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான பவித்ராவிற்கு திருமணமாகி விட்டது.

இந்நிலையில், இரவுப்பணி செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு தனது ஸ்கூட்டரில் துவாக்குடி சுங்கச்சாவடி அருகே திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக தஞ்சை மாவட்டம் பாபநாசத்திலிருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

உடல் அடக்கம்

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயக்குமாரை மீட்டு அருகே உள்ள துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த பாபநாசத்தை சேர்ந்த கனகராஜ் (36) என்பவரை கைது செய்தனர்.

இறந்த ஜெயக்குமாரின் உடல், துவாக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது

உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு, புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) அருள் சக்திகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் ஓயாமரி இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. விபத்தில் இறந்த ஜெயக்குமார் வருகிற ஜூன் மாதம் ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story