எடப்பாடி பழனிசாமியை போன்று மண்புழுபோல் ஊர்ந்து சென்று முதல்-அமைச்சராக மாட்டேன் மு.க.ஸ்டாலின் பேச்சு


எடப்பாடி பழனிசாமியை போன்று மண்புழுபோல் ஊர்ந்து சென்று முதல்-அமைச்சராக மாட்டேன் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 1 Dec 2019 11:15 PM GMT (Updated: 1 Dec 2019 8:58 PM GMT)

நான் எடப்பாடி பழனிசாமியை போன்று மண்புழுபோல் ஊர்ந்து சென்று முதல்-அமைச்சராக மாட்டேன் என புதுக்கோட்டையில் நடைபெற்ற பெரியண்ணன் அரசு எம்.எல்.ஏ. இல்லத்திருமணவிழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளரும், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான பெரியண்ணன் அரசு-சுஜாதா தம்பதியின் மகள் டாக்டர்.அபிநயா மற்றும் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை முத்து-தேவி தம்பதியின் மகன் டாக்டர்.பிரபு ஆகியோர் திருமணம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, திருமணத்தை நடத்தி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மிட்டாய் கொடுத்து வெற்றி

தற்போது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அரசு நிகழ்ச்சி என்றாலும், கட்சி நிகழ்ச்சி என்றாலும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. பொய்சொல்லி வெற்றி பெற்றது என்று தொடர்ந்து பேசி வருகிறார். இது மக்களை கொச்சை படுத்தும் செயல். தேனியில் அ.தி.மு.க. வெற்றி பெற்றபோதும், 2 சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற போதும் என்ன மிட்டாய் கொடுத்து தான் வெற்றி பெற்றீர்களா என்று நாங்கள் கேட்க வெகுநேரம் ஆகாது.

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருப்பதற்கு தி.மு.க.தான் காரணம் என்று பொய்சொல்லி வருகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதெல்லாம் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்தி வந்தது. அ.தி.மு.க. கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் முறையான இட ஒதுக்கீடு நடக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடுத்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தி.மு.க.வின் கோரிக்கை நியாயமானது. அதனால் நீங்கள் சரிசெய்துவிட்டு தேர்தலை நடத்துங்கள் என்று நீதிமன்றம் தான் சொன்னதே தவிர நாங்கள் ஏதும் சொல்லவில்லை.

தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இதன் விசாரணை வருகிற 13-ந் தேதி வர உள்ளது. தற்போது முதல்-அமைச்சர் பல மாவட்டங்களை பிரித்து விழா நடத்தி வருகிறார். மாவட்டத்தை பிரிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் மக்கள் வளர்ச்சி அடைவார்கள் என்றால் அதனை நாங்களும் வரவேற்கிறோம். ஆனால் இப்போது புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ளாட்சி பகுதிகளுக்கு முறையாக இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றுதான் நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் இதுகுறித்து எந்த பதிலும் கிடையாது. நான் எடப்பாடி பழனிசாமி போல் பதவிக்காக யார் காலிலும் மண்புழுபோல் ஊர்ந்து சென்று முதல்-அமைச்சராக மாட்டேன்.

எனக்கு சுயமரியாதை உண்டு

நான் கலைஞரின் மகன். எனக்கு சுயமரியாதை உண்டு. நான் பள்ளி காலத்திலேயே இயக்கத்தில் இணைந்து பணியாற்றி பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், இளைஞரணி செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர், செயல்தலைவர், தலைவர் என்று உயர்ந்திருக்கிறேன். நான் மிசாவில் சிறையில் இருந்தேனா என்று தற்போது சர்ச்சை எழுந்தது. நானே சிறையில் இருந்தேன் என்று என்னை பற்றி சொல்ல விரும்பவில்லை. நான் முதல்-அமைச்சர் பதவிக்கு ஆசைப்படவில்லை. தமிழகத்தில் சர்க்கரை ரே‌‌ஷன் அட்டைகளை, அரிசி ரே‌‌ஷன் அட்டைகளாக மாற்றப்படுகிறது. இதுவும் முறையாக நடக்கவில்லை. தற்போது தமிழக அரசு பொங்கல் பரிசு அறிவித்துள்ளது. ஆயிரம் ரூபாய் பணம் அறிவித்துள்ளது. முன்பெல்லாம் ஜனவரி மாதம் தான் அறிவிப்பார்கள். தற்போது டிசம்பர் மாதத்திலேயே அறிவித்து விட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பா.ஜ.க. மாநில துணை தலைவர் அரசகுமார் பேசினார்.


Next Story