ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவிகள் கண்டுபிடித்தால் கொண்டு வாருங்கள்


ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவிகள் கண்டுபிடித்தால் கொண்டு வாருங்கள்
x
தினத்தந்தி 1 Dec 2019 10:15 PM GMT (Updated: 1 Dec 2019 9:10 PM GMT)

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவிகள் கண்டுபிடித்தால் கொண்டு வாருங்கள் என்று பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெரம்பலூர்,

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் சுஜித் விழுந்து பலியானான். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவிகள் கண்டுபிடிக்க அனைத்து கல்லூரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தீயணைப்புத்துறை இயக்குனர் சைலேந்திரபாபு வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி கிராமத்தை சேர்ந்த அய்யாபிள்ளை என்பவர் புதிய கருவியை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டார். தீயணைப்புத்துறை திருச்சி மண்டல துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் வழிகாட்டுதலின்படி சென்னை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை இயக்குனரகத்தில் துறையின் இயக்குனர் சைலேந்திரபாபுவை, அய்யாபிள்ளை நேரில் சந்தித்தார்.

மக்கள் பயன்பெறும் வகையில்...

பின்னர் தான் கண்டுபிடித்த புதிய கருவியின் செயல்பாடு குறித்து தீயணைப்புத்துறை இயக்குனர் முன்னிலையில் விளக்கம் அளித்தார். மேலும் திட்ட அறிக்கையையும் சமர்ப்பித்தார். இதை பார்த்த தீயணைப்புத்துறை இயக்குனர் அய்யாபிள்ளையை பாராட்டியதுடன், அந்த கருவியை மேம்படுத்த ஊக்கமும் ஆலோசனையும் வழங்கினார். பெரம்பலூர் மாவட்டத்தில் எவரேனும் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவிகள் கண்டுபிடித்தால், அதை பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு கொண்டு வாருங்கள், அதன் செயல்பாடு குறித்து விளக்கம் அளித்து, மக்கள் பயன்பெறும் வகையில் இருக்க செய்ய தீயணைப்புத்துறை சார்பாக வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story