வடிகால் அமைக்கக்கோரி மழைநீரில் நின்றபடி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


வடிகால் அமைக்கக்கோரி மழைநீரில் நின்றபடி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Dec 2019 11:00 PM GMT (Updated: 1 Dec 2019 11:00 PM GMT)

வடிகால் அமைக்கக்கோரி மழைநீரில் நின்றபடி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் நான்குவழிச் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் ஆமை வேகத்தில் சென்றன. இந்த சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது.

ஒவ்வொரு மழையிலும் இது போன்று தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக இருந்தது. இது போல இந்த ஆண்டும் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மேலும் மழை நீர் சாலையோரமுள்ள கடைகளுக்குள் புகுந்ததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.

சிங்கபெருமாள் கோவிலில் மழைநீர் வடிகால் அமைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொகுதி செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நேற்று முழங்கால் அளவு மழைநீரில் நின்றபடி அந்த கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் அங்கு ஆய்வில் ஈடுபட்டார். பொக்லைன் எந்திரத்தை கொண்டு வந்து சாலையின் குறுக்கே உள்ள தடுப்புச்சுவரை இடித்து தண்ணீரை வெளியேற்றினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

தேசிய நெடுஞ்சாலையின் அருகேயுள்ள விஞ்சியம் பாக்கம் ஏரியின் கொள்ளளவு முக்கால்வாசி நிரம்பும் போதே தண்ணீரை திறந்து விட்டிருந்தால் அவை சிறுக சென்றிருக்கும். மொத்த கொள்ளளவையும் எட்டிய பிறகு மொத்தமாக திறந்து விட்டதால் 4 வழிச்சாலையில் தற்போது கடல் போல தேங்கி நிற்கிறது என்றனர்.

Next Story