உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து


உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து
x
தினத்தந்தி 2 Dec 2019 11:00 PM GMT (Updated: 2 Dec 2019 2:42 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து மனுக்களை பொதுமக்கள் பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்.

பெரம்பலூர்,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாகவும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி நேற்று காலை வெளியிட்டார். உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படாததால், அந்த பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வரவில்லை.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்ற நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சிறிது நேரம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கையெல்லாம் முடிந்த பிறகு தான் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது, அதுவரை கலெக்டர் அலுவலகத்தின் தரைத்தளத்தில் மனுக்களை போடுவதற்கு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் போட்டு விட்டு செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

பெட்டியில் மனுக்களை...

அதனை தொடர்ந்து குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கும் அரங்கத்தை விட்டு அதிகாரிகள் வெளியேறியதை தொடர்ந்து, அரங்கம் பூட்டப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் கோரிக்கை மனுக்களை போட்டு விட்டு சென்றனர். கிராமத்தில் இருந்து கூட்டம், கூட்டமாக மனு கொடுக்க பொதுமக்கள் வந்திருந்தனர். ஆனால் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அவர்களும் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டு விட்டு சென்றதை காணமுடிந்தது. முன்னதாக பெரம்பலூர் சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் புதிய பஸ் நிலைய கிளையின் செயலாளர் செல்லதுரை தலைமையில் சங்க உறுப்பினர்கள் அதிகாரிகளிடம் ஒரு மனு அளித்தனர்.

அதில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பழக்கடை அருகே உள்ள குப்பைகளை அகற்றவும், கழிவுநீர் கால்வாயை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஸ் நிலையத்தில் பழக்கடைகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக மாலை 6 மணிக்கு சென்னை செல்லக்கூடிய தனியார் பஸ்களை பலமணி நேரம் முன்னதாகவே நிறுத்தி வைக்கப்படுகிறது. அவ்வாறு நிறுத்தப்படும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் நிலையத்தில் பிச்சைக்காரர்களுக்கு பயணிகள் பணம் கொடுக்கவில்லையென்றால், அவர்கள் பயணிகளிடம் அத்துமீறி தகராறு செய்கிறார்கள். மேலும் பஸ் நிலையத்தில் நடக்கும் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.


Next Story