வாகன சோதனையில் போலீஸ்காரர் எனக்கூறி ஏமாற்றிய வாலிபர் கைது


வாகன சோதனையில் போலீஸ்காரர் எனக்கூறி ஏமாற்றிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 Dec 2019 10:15 PM GMT (Updated: 2 Dec 2019 4:28 PM GMT)

நெல்லை அருகே வாகன சோதனையில் போலீஸ்காரர் எனக்கூறி ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, 

நெல்லை அருகே தாழையூத்து பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேசுவரி நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினார். உடனே காரில் இருந்த நபர், தான் போலீஸ்காரராக சென்னையில் வேலை பார்க்கிறேன் என்று கூறினார். உடனே அடையாள அட்டையை காண்பிக்குமாறு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேசுவரி கூறினார். உடனே அவர் போலீசாருக்கான அடையாள அட்டையை காண்பித்தார். அதனை பார்த்து சந்தேகம் அடைந்த அவர், அந்த நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவரிடம் இருந்தது போலியான அடையாள அட்டை என்றும், அவர் போலீஸ்காரராக வேலை பார்க்கவில்லை என்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் பாளையங்கோட்டையை சேர்ந்த செல்வமணி (வயது24) என்பதும், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும், போலீஸ்காரர் என ஏமாற்றியதும் தெரியவந்தது.

பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வமணியை கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Next Story