நெகமம் அருகே, சாலையோர பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் கார் கவிழ்ந்து வியாபாரி சாவு


நெகமம் அருகே, சாலையோர பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் கார் கவிழ்ந்து வியாபாரி சாவு
x
தினத்தந்தி 2 Dec 2019 10:15 PM GMT (Updated: 2 Dec 2019 4:48 PM GMT)

நெகமம் அருகே சாலையோர பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் கார் கவிழ்ந்தது. இதில் தண்ணீரில் மூழ்கி வியாபாரி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நெகமம்,

கேரள மாநிலம் எர்ணாகுளம் முவாற்றுப்புழா பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 47). இவர் பருப்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது மனைவியின் உறவினர் வீட்டு திருமணத்திற்காக பொள்ளாச்சி வழியாக தாராபுரம் ரோட்டில் கொடுமுடி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

நேற்று அதிகாலை சுந்தர கவுண்டனூர் என்ற இடத்தில் வரும் போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது. இதனால் கார் தண்ணீரில் மூழ்கியது. உடனே காருக்குள் இருந்த சுப்பிரமணியம் வெளியே வர போராடினார். ஆனால் அவரால் முடிய வில்லை.

இதை அறிந்த கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் நெகமம் போலீசார் மற்றும் பொள்ளாச்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், தண்ணீரில் மூழ்கிய காரை நீண்ட நேரம் போராடி தண்ணீரில் இருந்து மீட்டனர். இதில் காருக்குள் இருந்த சுப்பிரமணியம் வெளியே வர முடியாததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து நெகமம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story