அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அதிக மழை பெய்தாலும் வெள்ள பாதிப்பு தவிர்க்கப்பட்டு உள்ளது - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அதிக மழை பெய்தாலும் வெள்ள பாதிப்பு தவிர்க்கப்பட்டு உள்ளது - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 2 Dec 2019 11:00 PM GMT (Updated: 2 Dec 2019 5:10 PM GMT)

அரசின் குடிமராமத்து திட்டம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அதிக மழை பெய்த போதிலும் வெள்ள பாதிப்புகள் தவிர்க்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமார்ஜெயந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன், மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, மழை வெள்ள பாதிப்புகளை தவிர்ப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்திலும் அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை சராசரியாக 428.4 மில்லி மீட்டர் பெய்ய வேண்டும். இதுவரை 547 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. மாவட்டத்தில் ஆண்டு மழையளவு சராசரியாக 662.2 மில்லி மீட்டர் பெய்ய வேண்டும். இதுவரை 699.53 மில்லி மீட்டர் பெய்து உள்ளது.

மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில் குளங்கள் தூர்வாரப்பட்டன. இதனால் அதிகளவு மழை பெய்தாலும், பாதிப்புகள் இல்லாமல் மழைநீர் குளங்களில் சேமிக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெருமளவு பொருட்சேதம், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. 4 கால்நடைகள் உயிரிழந்து உள்ளன. தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த முகாம்களில் நிவாரண உதவிகளை பெற்று சென்று உள்ளனர்.

தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் தண்ணீர் தேங்கியது. உடனடியாக கூடுதல் மோட்டார்கள் வைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. தற்காலிகமாக தண்ணீரை அகற்றவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுப்பதற்காக சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் அனைத்து குளங்களும் பராமரிக்கப்பட்டு வந்தாலும், தொடர்ந்து குளங்களை கண்காணிக்க அறிவுறுத்தி உள்ளோம். 90 சதவீதம் குளங்கள் நிரம்பி உள்ளன. இதனால் தண்ணீரை முழுமையாக சேமிக்கவும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும் அனைத்து துறை அதிகாரிகளும் களத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

தூத்துக்குடி மாநகராட்சியில் 2015-ம் ஆண்டுக்கு பிறகு பக்கிள் ஓடையை சீரமைக்க வேண்டும். கோரம்பள்ளம் உபரிநீரை பக்கிள் ஓடையுடன் இணைக்க வேண்டும் என்ற வகையில் ரூ.74 கோடி செலவில் திட்டம் தீட்டப்பட்டது. அந்த பணிகளும், பாதாள சாக்கடை திட்ட பணிகளும் விரைந்து நடந்து வருகின்றன. தூத்துக்குடி எம்.எல்.ஏ.வும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அவரும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவித்தார். எங்களை பொறுத்தவரை பாகுபாடு கிடையாது. தூத்துக்குடி மாவட்டம் சீராக இருக்க வேண்டும் என்ற வகையில் செயல்பட்டு வருகிறோம்.

உள்ளாட்சி தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும் என்று முதல்-அமைச்சர் கூறி உள்ளார். இன்று வரை அந்த கூட்டணி தொடருகிறது. ஊரக பகுதிகளுக்கு முதலில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது நல்ல நடைமுறை. இந்த நடைமுறையை பார்த்து இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் பின்தொடர்ந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. விரைவில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதனை வரவேற்கிறோம்.

தி.மு.க. அவசர வழக்கு தாக்கல் செய்து உள்ளது. இது எதிர்பார்த்ததுதான். ஏனென்றால் தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாராக இல்லை. அதற்கு காரணம், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றி தற்காலிகமான வெற்றி, ஏமாற்று அறிக்கையால் பெற்ற வெற்றி என்பதை கூறினோம். அது நிரூபிக்கப்பட்டுவிட்டது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இதனால் தமிழக வாக்காளர்களிடம் தமது கதை செல்லாது என்று தேர்தலை சந்திக்க பயந்து கோர்ட்டுக்கு சென்று உள்ளார். நாங்கள் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சிநகர், செல்வவிநாயகபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கி உள்ள மழைநீரை அகற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேங்கி உள்ள மழைநீரை விரைவாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Next Story