தொடர் மழையால் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கெடுக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்


தொடர் மழையால் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கெடுக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Dec 2019 10:45 PM GMT (Updated: 2 Dec 2019 5:10 PM GMT)

தொடர் மழையால் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கெடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டாரத்தில் தொடர் மழை காரணமாக ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பி உள்ளது. செங்கிப்பட்டி பகுதியில் உய்யக்கொண்டான் நீடிப்பு கால்வாய் மூலம் பாசனம் பெறும் ஏரிகளும், புதிய கட்டளை மேட்டுகால்வாய் வழியாக பாசனம் பெறும் ஏரிகளும் முழுமையாக நிரம்பி உள்ளன.பெரும்பாலான ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. உய்யக்கொண்டான் நீடிப்பு கால்வாய் பாசன பகுதியில் வெண்டயம்பட்டி பகுதியில் சமீபத்தில் நடவு செய்யப்பட்ட வயல்கள் மழைநீரில் மூழ்கி காணப்படுகின்றன. மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

பொங்கல் கரும்பு

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பொங்கல் பண்டிகைக்காக பயிர் செய்யப்பட்டிருந்த பொங்கல் கரும்புகளும் மழையால் சாய்ந்து காணப்படுகின்றன. பல கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. பூதலூர் நான்சி நகர், ஜோதி நகர், வடக்கு பூதலூர் நடுத்தெரு, சந்து தெரு, வடக்கு அம்பலக்காரத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து இருப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த பகுதியில் மழைநீர் வடிகால்களை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர் மழையால் பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கணக்கெடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள். இது குறித்து பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

சீரமைப்பு பணிகள்

பூதலூர் ஒன்றிய பகுதியில் மழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி காணப்படுகின்றன. தாழ்வான பகுதியில் உள்ள தெருக்களில் மழைநீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மழை பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் உடனடியாக சீரமைப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

தண்ணீரில் முழ்கி உள்ள நெற்பயிர்கள், சாய்ந்த கரும்புகள் குறித்து அதிகாரிகள் கணக்கீடு செய்ததாக தெரியவில்லை. உடனடியாக வருவாய்த்துறையினர் பாதிக்கப்பட்ட நெல், வாழை, கரும்பு மற்றும் தண்ணீர் சூழ்ந்த குடியிருப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story