சுரண்டை பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்


சுரண்டை பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 2 Dec 2019 10:15 PM GMT (Updated: 2 Dec 2019 5:10 PM GMT)

சுரண்டை பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சுரண்டை, 

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் 13 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில், நகரப்பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர், மாவட்ட பூச்சியியல் நிபுணர் குருநாதன், வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் சுரண்டை பகுதிகளில் நேற்றுமுன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு இருந்த ஒரு கிணற்றை, அதிகாரிகள் பார்வையிட்டனர்.

அப்போது கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த நிலவேம்பு கசாயம் கொடுக்கவும், சுகாதார பணிகளை தீவிரப்படுத்தவும், மருத்துவ முகாம் நடத்தவும், வாறுகால்களை தூர்வாரவும் உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து சுரண்டை நகரப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சுரண்டை, சாம்பவர் வடகரை, இலஞ்சி, ஆய்குடி, கீழப்பாவூர், குற்றாலம் ஆகிய நகரப்பஞ்சாயத்துகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் சென்று, வாறுகால்களை தூர்வாரி துப்புரவு செய்து, டெங்கு தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர்.

மேலும் சுகாதார துறை சார்பில், பாவூர்சத்திரம் வட்டார ரா‌‌ஷ்டிரிய பால் ஸ்வஸ்தியா காரியக்கர்ம் டாக்டர் சிஞ்சு குழுவினருடன் 2 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

Next Story