சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் பாகனை மிதித்து கொன்ற யானை


சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் பாகனை மிதித்து கொன்ற யானை
x
தினத்தந்தி 2 Dec 2019 11:00 PM GMT (Updated: 2 Dec 2019 5:24 PM GMT)

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் ஆண்டாள் என்ற யானை பாகனை மிதித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னங்குறிச்சி,

சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரம் பகுதியில் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்காவிற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இங்கு மான், முதலைகள், பறவைகள், பாம்புகள் உள்பட வன விலங்குகள் பார்வைக்காக கூண்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள், பூங்காவிற்கு அதிகளவில் வந்து செல்வதுண்டு.

இந்த பூங்காவிற்கு கடந்த 2009-ம் ஆண்டில் மதுரை அழகர் கோவிலில் இருந்து ஆண்டாள் என்ற ஒரு யானை கொண்டு வரப்பட்டது. அந்த யானையின் பாகன்களாக பொள்ளாச்சியை சேர்ந்த காளியப்பன் (வயது 45) மற்றும் பழனி ஆகியோர் இருந்தனர். இவர்கள் இருவரும் யானையை பராமரித்து அதற்கு தேவையானவற்றை செய்து வந்தனர். மேலும், 3 மாதங்களுக்கு ஒருமுறை யானையின் உடல்நிலையை மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்வது வழக்கமாகும்.

பாகனை மிதித்தது

இந்தநிலையில், ஆண்டாள் யானையை பரிசோதனை செய்வதற்காக வனத்துறையை சேர்ந்த கால்நடை டாக்டர் பிரகா‌‌ஷ் உள்பட சிலர் நேற்று மாலை 5 மணியளவில் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு வந்தனர். பின்னர் டாக்டர் பிரகாஷ் யானையின் கண், இதர பாகங்கள் என உடல்நிலையை பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது யானையின் முன்னங்கால் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது.

அந்த சமயத்தில் திடீரென ஆக்ரோ‌‌ஷத்துடன் காணப்பட்ட யானை, அருகில் நின்று கொண்டிருந்த பாகன் காளியப்பனை துதிக்கையால் பிடித்து தூக்கி கீழே தரையில் ஓங்கி அடித்தது. பின்னர் அவரை யானை தனது கால்களால் மிதித்து கொன்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த டாக்டர் பிரகா‌‌ஷ் மற்றும் அவருடன் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மயக்க ஊசி

அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி மற்றும் அதிகாரிகள், போலீசார் அங்கு விரைந்து வந்தனர். ஆனால் யானையின் கால் பகுதியிலேயே காளியப்பனின் உடல் கிடந்தது. பின்னர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 68 வயதான இந்த ஆண்டாள் யானை ஏற்கனவே ஒரு பெண்ணை மிதித்து கொன்றுள்ளது. இதுமட்டுமின்றி மதுரையில் அழகர் கோவிலில் இருந்தபோது 3 பேரை மிதித்து கொன்றதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்த பாகன் காளியப்பனுக்கு சபரி என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் பாகனை யானை ஒன்று மிதித்து கொன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story