பருவமழை எதிரொலி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


பருவமழை எதிரொலி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 2 Dec 2019 11:00 PM GMT (Updated: 2 Dec 2019 6:30 PM GMT)

பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூர்,

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக பருவமழை பெய்து வருகிறது. இந்த மழை தமிழக மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்கிறது. கடந்த 2 நாட்களாக மழை தீவிரம் அடைந்துள்ளது.

இதன் காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.

4-வது முறை நிரம்பியது

நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 1 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்தது.

கடந்த மாதம் 11-ந்தேதி அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி இந்த ஆண்டில் 4-வது முறையாக நிரம்பியது. அணை நிரம்பி உள்ள நிலையில் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பாசனத்துக்கான தண்ணீர் தேவை மிகவும் குறைந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

திறப்பு அதிகரிப்பு

இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்காக அணையில் இருந்து 7 ஆயிரத்து 400 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரம் அடையுமானால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Next Story