நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஊரக பகுதியில் மட்டும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது - கலெக்டர் ‌ஷில்பா பேட்டி


நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஊரக பகுதியில் மட்டும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது - கலெக்டர் ‌ஷில்பா பேட்டி
x
தினத்தந்தி 2 Dec 2019 10:45 PM GMT (Updated: 2 Dec 2019 6:32 PM GMT)

உள்ளாட்சி தேர்தலையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஊரக பகுதியில் மட்டும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது என்று கலெக்டர் ‌ஷில்பா கூறினார்.

நெல்லை, 

நெல்லை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நெல்லை மாவட்ட கலெக்டர் ‌ஷில்பா நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை, தென்காசி மாவட்டங்கள் ஒருங்கிணைந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். 27-ந்தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், 30-ந் தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 6-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.

ஊரக பகுதி மக்கள் 4 வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். கிராம பஞ்சாயத்து உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர், யூனியன் கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் என 4 பேரை தேர்வு செய்ய, 4 வாக்குச்சீட்டுகளில் வாக்களிக்க வேண்டும்.

நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2,411 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் படி ஊரக பகுதிகளில் மட்டும் 13 லட்சத்து 57 ஆயிரத்து 163 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதில் 6,67,833 ஆண்களும், 6,89,291 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 39 பேர் உள்ளனர்.

இங்கு தேர்தல் நடத்த 41 தேர்தல் அதிகாரிகளும், 579 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 26 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் வார்டுகள் உள்ளன. 19 யூனியன்களும், அவற்றின் கீழ் 425 கிராம ஊராட்சிகளும் உள்ளன. 19 யூனியன்கள் அடிப்படையில் 19 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படுகிறது.

18 ஆயிரத்து 120 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வாக்குச்சாவடி ஊழியர்களாக செயல்படுவார்கள். இவர்களுக்கு பணியிட ஒதுக்கீடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறும். பின்னர் 2 கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

கிராம ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தேர்தல் கட்சி சார்பில்லாத தேர்தல் ஆகும். இங்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் வாக்குச்சீட்டில் இருக்காது. எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்களோ அவர்களது வரிசை எண் மற்றும் சின்னம் மட்டுமே வாக்குச்சீட்டில் அச்சிடப்பட்டு இருக்கும். ஏற்கனவே சின்னங்கள் பதிவு செய்யப்பட்ட வாக்குச்சீட்டுகள் தற்போது தயார் நிலையில் உள்ளது. யூனியன் கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர்களுக்கான வாக்குச்சீட்டில் வேட்பாளர் பெயர் மற்றும் அவர்களது கட்சி சின்னம் அல்லது சுயேச்சை சின்னம் பொறிக்கப்படும். இதற்கு தேவையான அச்சிடப்படாத வாக்குச்சீட்டுகளும் தயார் நிலையில் உள்ளது. வேட்பாளர் இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்ட உடன், இந்த காகிதங்களில் சின்னம், வேட்பாளர் பெயர் அச்சிடப்படும்.

தேவையான ஓட்டுப்பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. 3,602 ‘டான்சி ஸ்பெ‌‌ஷல்’ பெட்டிகள், 1,410 ‘டான்சி மீடியம்’ பெட்டிகள், 4,272 ‘கோத்ரெஜ்’ சிறிய பெட்டிகள் என தேவையான ஓட்டுச்சீட்டு பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் மட்டும் தேர்தல் நடைபெறுவதால், ஊரக பகுதிகளில் மட்டும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதியில் எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. முதல் கட்டமாக 9 யூனியன் பகுதிகளிலும், 2-வது கட்டமாக 10 யூனியன் பகுதிகளிலும் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. வருகிற 6-ந் தேதி அதுபற்றிய கூடுதல் விவரம் அறிவிக்கப்படும்.

தற்போது நெல்லை, தென்காசி மாவட்டங்கள் வருவாய் குறுவட்டம் அடிப்படையில் பிரிக்கப்பட்டு உள்ளன. பஞ்சாயத்து யூனியன்கள் அடிப்படையில் இதுவரை பிரிக்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு முறையாக பிரிக்கப்படும். அதுபற்றி தேர்தலுக்கு பிறகு தெரியவரும்.

பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து நாடாளுமன்ற தேர்தல் அடிப்படையிலும், உள்ளாட்சி பதவி அடிப்படையிலும் யூனியன் ஆணையாளர், போலீசாருடன் சேர்ந்து முடிவு செய்வார்கள். அந்த பட்டியலை அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தயார் செய்து தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது தென்காசி மாவட்ட கலெக்டர் அருண்சுந்தர் தயாளன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஓம்பிரகா‌‌ஷ் மீனா (நெல்லை), சுகுணா சிங் (தென்காசி), நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட திட்ட இயக்குனர் மந்திராச்சலம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story