நேர்மையான முறையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் அ.தி.மு.க. வெற்றி பெறாது கே.எஸ். அழகிரி பேட்டி


நேர்மையான முறையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் அ.தி.மு.க. வெற்றி பெறாது கே.எஸ். அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 2 Dec 2019 11:15 PM GMT (Updated: 2 Dec 2019 6:50 PM GMT)

நேர்மையான முறையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் அ.தி.மு.க. வெற்றி பெறாது என்று, மயிலாடுதுறையில் கே.எஸ். அழகிரி கூறினார்.

மயிலாடுதுறை,

தமிழக அரசு ஊராட்சி பகுதிக்கு மட்டும் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு அனுபவம் உள்ள அதிகாரிகளை கொண்ட தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்கு மட்டும் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும், அதன் பிறகு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது.

அரசு எந்திரம் மனிதர்களின் உழைப்பை வீணடிக்கக்கூடாது. ஒரு தேர்தலால் அதிகாரிகள் எவ்வளவு வேலை நாட்களை விரயம் செய்வார்கள் என்று எண்ணி பார்க்க வேண்டும். அந்த நாட்களில் அரசாங்கத்துக்கான பணிகள் சிறப்பாக நடைபெறாது. இதனால் பண விரயம், ஏராளமான பொருள் செலவு ஏற்படும். இதன் மூலம் தமிழக அரசு வேண்டுமென்று தவறான பாதையில் செல்கிறது என்பது தெரிகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீட்டு முறையை கூட சரியாக செய்யவில்லை.

புதிதாக மாவட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். ஆனால் பழைய முறையிலேயே தேர்தல் நடைபெறும் என்று சொன்னால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு பஞ்சாயத்து தலைவர்களின் செயல்பாடு என்ன என்பது கேள்வி குறியாகும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது என்பதற்காக தேர்தலை தமிழக அரசு அறிவித்துள்ளது. நேர்மையான முறையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது. மக்கள் பங்களிப்பு இல்லாத மறைமுக தேர்தல் குதிரைபேரத்துக்கு வழிவகுக்கும். மக்கள் நேரடியாக வாக்களிக்காமல் மக்கள் பிரதிநிதிகளை வைத்து தலைவர்களை தேர்வு செய்வது தவறான அணுகு முறையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story