புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 551 பதவிகளுக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்


புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 551 பதவிகளுக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்
x
தினத்தந்தி 2 Dec 2019 10:30 PM GMT (Updated: 2 Dec 2019 7:27 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 551 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 27-ந் தேதி முதல் கட்டமாகவும், 30-ந் தேதி 2-வது கட்டமாகவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி உள்ளிட்டவற்றிற்கு மட்டுமே உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

முதல் கட்டமாக அன்னவாசல், விராலிமலை, கறம்பக்குடி, குன்னண்டார்கோவில், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும், 2-ம் கட்டமாக அரிமளம், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், பொன்னமராவதி, திருமயம், மணமேல்குடி, திருவரங்குளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

4 ஆயிரத்து 551 பதவிகளுக்கு

தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 22 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும், 225 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், 497 பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும், 3 ஆயிரத்து 807 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 4 ஆயிரத்து 551 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் 5 லட்சத்து 27 ஆயிரத்து 976 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 29 ஆயிரத்து 828 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 31 என மொத்தம் 10 லட்சத்து 57 ஆயிரத்து 835 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

வாக்காளர்கள் வாக்களிக்க மாவட்ட தேர்தல் ஆணையம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் 2 ஆயிரத்து 301 வாக்குச்சாவடி மையங்களை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Next Story