திருவள்ளூர் மாவட்டத்தில், கனமழைக்கு 17 குடிசை வீடுகள் இடிந்து சேதம்: மழை பாதிப்பு பகுதிகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு


திருவள்ளூர் மாவட்டத்தில், கனமழைக்கு 17 குடிசை வீடுகள் இடிந்து சேதம்: மழை பாதிப்பு பகுதிகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 2 Dec 2019 11:00 PM GMT (Updated: 2 Dec 2019 7:47 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு 17 குடிசை வீடுகள் இடிந்து சேதம் அடைந்தது. அதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

மீஞ்சூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஈக்காடு, புட்லூர், மணவாளநகர், அரண்வாயல், திருமழிசை, வெள்ளவேடு, செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, திருப்பாச்சூர், கடம்பத்தூர், புதுமாவிலங்கை, அகரம், பேரம்பாக்கம், மப்பேடு, கூவம், குமாரச்சேரி, பண்ணூர், கீழச்சேரி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது.

இதைத்தொடர்ந்து திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் பகுதியில் உள்ள ஏரியில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையில் அந்த ஏரி நிரம்பி தரைப்பாலத்தில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அதே போல பேரம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரில் பலத்த மழையின் காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை இழந்து அவதியுற்று வருகின்றனர். அதே போல திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட சென்றயான்பாளையத்தில் சுமார் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் 9 குறு வட்டங்களில் 204 கிராம் வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில் 800-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் 4 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து, மழை பெய்து வருகிறது.

பல இடங்களில் குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. பழைய எருமைவெட்டிபாளையம், பெரியகாவனம், அரசூர், பூவாமி, பழுது எருமைவெட்டிபாளையம், ஆத்தூர், கோளூர் ஆகிய இடங்களில் 11 குடிசை வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னேரி வருவாய் ஆர்.டி.ஓ. நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் திருப்பாலைவனம் செஞ்சியம்மன் நகர், அத்திப்பட்டுபுதுநகர் பள்ளம் பகுதி உள்பட பல இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.

இதைத்தொடர்ந்து மழை நீர் தேங்கி உள்ள இடங்களையும், குடிசை வீடுகள் மழையால் இடிந்து விழுந்தது குறித்தும் ஆய்வு செய்தனர். வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதாலும் கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பந்தப்பட்ட கிராமங்களில் தங்கி இருந்து, ஏரி குளங்கள் உட்பட நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பு குறித்து தகவல் அளிக்க வேண்டும் என ஆர்.டி.ஓ. நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

மீஞ்சூர் ஒன்றிய ஆணையாளர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திர பாபு மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதை அகற்ற சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர்களுக்கு உத்தரவிட்டனர்.

அத்திப்பட்டுபுதுநகரில் மின்மோட்டார் மூலம் குடியிருப்பு பகுதியில் மழைநீரை அகற்றி வருவதை பார்வையிட்டு வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர்.

அதேபோல சோழவரம் ஒன்றியத்தின் ஆணையாளர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சிகளில் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதனைச்சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் தொடர்ந்து கனமழை பெய்தது. ஆனால் நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதே தவிர மழை பெய்யவில்லை.

இந்த நிலையில், நேற்று முன்தினம் பெய்த கனமழைக்கு கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னஓபுளாபுரம் கிராமத்தில் உள்ள காமாட்சி, தேவி, வள்ளியம்மாள், செங்கம்மாள், சுலோக்சனா மற்றும் சரோஜா ஆகிய 6 பேர்களின் குடிசை வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.

இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி தாசில்தார் செந்தாமரை செல்வி, மண்டல துணை தாசில்தார் மாலினி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு குடிசை வீடுகள் சேதம் தொடர்பாக அறிக்கையை அனுப்பி உள்ளனர்.

Next Story