அ.தி.மு.க.வுக்கு தோல்வி பயம்: உள்ளாட்சி தேர்தலை நேர்மையான முறையில் நடத்த தி.மு.க. முழு முயற்சி - மு.க.ஸ்டாலின் பேட்டி


அ.தி.மு.க.வுக்கு தோல்வி பயம்: உள்ளாட்சி தேர்தலை நேர்மையான முறையில் நடத்த தி.மு.க. முழு முயற்சி - மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 2 Dec 2019 11:15 PM GMT (Updated: 2 Dec 2019 8:00 PM GMT)

உள்ளாட்சி தேர்தலை நேர்மையான முறையில் நடத்த தி.மு.க. முழு முயற்சி மேற்கொள்ளும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி,

தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு தோல்வி பயம் காரணமாக உள்ளாட்சி தேர்தலை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தாமல் காலம் கடத்தி வந்தனர். உச்சநீதிமன்றம் தேர்தலை நடத்த வேண்டும் என அறிவுறுத்திய காரணத்தால் வேறு வழியின்றி தேர்தலை நடத்துகிறார்கள். மேலும் யாராவது நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க.வுடன் மாநில தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து திட்டமிட்டு தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க. மட்டுமின்றி பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், பொது நலஅமைப்புகள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். வார்டு மறுவரையறை முறையாக செய்யப்படவில்லை. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு ஒதுக்க வேண்டிய வார்டுகள் மறுவரையறையும் முழுமையாக நடக்கவில்லை.

ஆனால் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், தி.மு.க. தான் தேர்தலை நிறுத்துவதற்கு திட்டமிடுவதாக பொய் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் உதயமாகி உள்ளது. அந்த மாவட்டங்களின் வார்டுகள் முழுவரையறையை நாங்கள் கேட்கிறோம். இதுதொடர்பாக அரசிடம் இருந்தோ, மாநில தேர்தல் ஆணையத்திடம் இருந்தோ எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. எனவே தான் தி.மு.க. நீதிமன்றத்தை அணுகி உள்ளது. வேறு எந்த காரணத்திற்காகவும் நாங்கள் நீதிமன்றத்தை நாடவில்லை.

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் ஒரே கட்டமாகத்தான் நடந்துள்ளது. அதேபோல் உள்ளாட்சி தேர்தலும் ஒரே கட்டமாகத்தான் நடைபெற்று இருக்கிறது. ஆனால் இப்போது உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது வேடிக்கையாக உள்ளது. தேர்தல் ஆணையத்தில் இருப்பவர் தேர்தல் ஆணையர் பழனிசாமியா? அல்லது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியா? என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. இதுபற்றி கட்சிகளுடன் கலந்துபேசி ஓரிரு தினங்களில் முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டு உள்ள வழக்கு வருகிற 5-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நேர்மையான முறையில் நடத்த தி.மு.க. முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டுவிட்டு சென்னை செல்லும் வழியில் புதுச்சேரிக்கு வந்தார். அவரை புதுவை மாநில தி.மு.க. சார்பில் மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. (தெற்கு), எஸ்.பி.சிவக்குமார் (வடக்கு), வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். புதுவை அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோரும் மரியாதை நிமித்தமாக மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள்.

Next Story