சமயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகள் திருட்டு


சமயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 2 Dec 2019 10:15 PM GMT (Updated: 2 Dec 2019 9:23 PM GMT)

சமயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் துணிகளையும் அள்ளிச் சென்றனர்.

சமயபுரம்,

சமயபுரம் அருகே உள்ள மாகாளிக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு(வயது 32). இவர் சமயபுரத்தில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சசிகலா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 1-ந் தேதி ஆந்திராவில் நடைபெற்ற மனைவியின் சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்ள பாபு குடும்பத்தினருடன் அங்கு சென்றிருந்தார்.

திருமணம் முடிந்து நேற்று முன்தினம் இரவு அவர் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த தங்க நெக்லஸ், தோடு, மோதிரம் உள்ளிட்ட 7 பவுன் நகைகள் திருட்டு போய் இருந்தது. மேலும், பீரோவில் வைக்கப்பட்டு இருந்த பட்டு புடவைகள் மற்றும் துணிகளையும் மர்ம நபர்கள் அள்ளிச் சென்றிருந்தது தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து சமயபுரம் போலீஸ் நிலையத்தில் பாபு புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள், அந்த பகுதியில் பெய்த மழையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இந்த துணிகர செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், இந்த திருட்டு குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story