விக்கிரவாண்டி அருகே, ஆற்றில் குளித்த பெயிண்டர் பிணமாக மீட்பு


விக்கிரவாண்டி அருகே, ஆற்றில் குளித்த பெயிண்டர் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 3 Dec 2019 11:00 PM GMT (Updated: 3 Dec 2019 1:08 PM GMT)

விக்கிரவாண்டி அருகே ஆற்றில் குளித்த பெயிண்டர் பிணமாக மீட்கப்பட்டார்.

விக்கிரவாண்டி, 

திண்டிவனத்தை அடுத்த ரெட்டணை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 26). பெயிண்டரான இவர் கடந்த 1–ந் தேதி மாலை தனது நண்பர்களுடன் விக்கிரவாண்டி அருகே தொண்டி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் கரையேறவில்லை. அவர் ஆற்றில் குளித்துவிட்டு முன்கூட்டியே வீடு திரும்பியிருக்கலாம் என எண்ணி அவரது நண்பர்களும் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர்.

அதன் பிறகுதான் ஆற்றில் இருந்து செல்வம் வீடு திரும்பாதது தெரியவந்தது. உடனே அவரது நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் ஆற்றின் கரைக்கு சென்று பார்த்தபோது செல்வத்தின் துணிகள் கிடந்தது. அவர் ஆற்றில் மூழ்கியதை அறிந்ததும் திண்டிவனம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று செல்வத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் 2 நாட்களுக்கு பிறகு நேற்று காலை செல்வத்தின் உடல் அவர் குளித்த அதே பகுதியில் கரை ஒதுங்கியது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் தகவல் அறிந்து வந்த பெரியதச்சூர் போலீசார், செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story