மாவட்டத்தில் பரவலாக மழை: அண்ணாமலைநகரில் 78 மில்லி மீட்டர் பதிவு


மாவட்டத்தில் பரவலாக மழை: அண்ணாமலைநகரில் 78 மில்லி மீட்டர் பதிவு
x
தினத்தந்தி 3 Dec 2019 10:15 PM GMT (Updated: 3 Dec 2019 3:58 PM GMT)

மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிபட்சமாக அண்ணாமலைநகரில் 78.30 மில்லி மீட்டர் மழை பதிவானது. தொடர்ந்து பெய்த மழையால் 744 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.

கடலூர், 

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதையடுத்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்தது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டித்தீர்த்தது. இதனால். குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். கடலூர் கிழக்கு வேணுகோபாலபுரத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பின்புறம் உள்ள அங்கன்வாடி மையத்தின் உள்ளே மழைநீருடன் கழிவுநீரும் கலந்து உள்ளே புகுந்தது. இதை அங்கன்வாடி பணியாளர்கள் பாத்திரங்கள் வைத்து அப்புறப்படுத்தினர்.

இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள தென் தமிழக கடல் பகுதிகளிலும், தென்மேற்கு அரபிக்கடல் பகுதியிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் உள்ளிட்ட 3 கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்தது.

அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் காலையில் மிதமான மழை பெய்தது. மதியவேளைக்கு பிறகு மழை பெய்யாததால் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் வடிய தொடங்கியது.

பின்னர் மாலை, இரவு நேரங்களில் விட்டு விட்டு பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது. இதனால் மழைநீர் வடிந்த பகுதிகளில் மீண்டும் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சி அளித்தது. அதேபோல் பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமு‌‌ஷ்ணம், சிதம்பரம், தொழுதூர், வேப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. இரவில் கடும் குளிர் நிலவியதால் பொதுமக்கள் கடும் அவதியுற்றனர்.

நேற்று காலை 7 மணியவில் வெயில் அடித்தது. சில நிமிடங்களுக்கு பிறகு வானத்தில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. ஆனால் மாலை வரையிலும் மழை பெய்யவில்லை. மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையில் 744 வீடுகள் சேதம் அடைந்தன. இதில் 53 குடிசை வீடுகள் முழுமையாகவும், 608 குடிசை வீடுகள் மற்றும் 83 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளன.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிபட்சமாக அண்ணாமலைநகரில் 78.30 மில்லி மீட்டர், குறைந்தபட்சமாக பண்ருட்டியில் 15 மில்லி மீட்டர் மழை பதிவானது. சராசரியாக 47.17 மில்லி மீட்டர் மழை பெய்தது.

மாவட்டத்தின் பிற இடங்களில் பெய்துள்ள மழை அவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பரங்கிப்பேட்டை - 72, காட்டுமன்னார்கோவில் - 72, புவனகிரி - 67, சேத்தியாத்தோப்பு - 60.80, கொத்தவாச்சேரி - 58, லக்கூர் - 53.10, லால்பேட்டை - 52.80, ஸ்ரீமு‌‌ஷ்ணம் -52.10, சிதம்பரம் - 51.60, வானமாதேவி - 48, காட்டுமயிலூர் - 48,
கொத்தவாச்சேரி - 46, தொழுதூர் - 46, வேப்பூர் - 45, மேமாத்தூர் - 42, பெலாந்துறை - 40.20, கடலூர் - 39.30, விருத்தாசலம் - 36.20, வடக்குத்து - 36, குப்பநத்தம் - 32.20, குறிஞ்சிப்பாடி - 31, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி - 29.50, கலெக்டர் அலுவலக வளாகம் - 27.20.

Next Story