இலவச வீடு கட்டித்தருவதாக மோசடி: பாதிரியாருக்கு 4 ஆண்டு சிறை; ரூ.16 லட்சம் அபராதம் - குடியாத்தம் கோர்ட்டு தீர்ப்பு


இலவச வீடு கட்டித்தருவதாக மோசடி: பாதிரியாருக்கு 4 ஆண்டு சிறை; ரூ.16 லட்சம் அபராதம் - குடியாத்தம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 3 Dec 2019 10:30 PM GMT (Updated: 3 Dec 2019 6:55 PM GMT)

இலவச வீடு கட்டித்தருவதாக பண மோசடி செய்த வழக்குகளில் பாதிரியாருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.16 லட்சம் அபராதமும் விதித்து குடியாத்தம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

குடியாத்தம்,

வேலூரை அடுத்த அரியூர் ரெயில்வேகேட் அருகில் வசித்து வந்தவர் யோபுசரவணன் என்ற ஜோப்சரவணன் (வயது 49). இவர் தன்னை பாதிரியார் எனவும், தொண்டு அறக்கட்டளையின் தலைவராக உள்ளதாகவும் கூறி வந்துள்ளார். இவர் கடந்த 2005-ம் ஆண்டு தனக்கு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களில் இருந்து பணம் வருவதாகவும், அதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வீடு கட்டி தருவதாகவும், அதற்காக வீடு கட்டித்தர டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

இதனை நம்பி குடியாத்தத்தை சேர்ந்த பலர் டெபாசிட் தொகையாக லட்சக்கணக்கில் பணத்தை யோபுசரவணனிடம் கொடுத்துள்ளனர். ஆனால் யோபுசரவணன் வீடு கட்டி கொடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் டெபாசிட் தொகையை அவர்களிடம் திரும்ப அளிக்கவும் இல்லை.

இதனால் அவர்கள் தொடர்ந்து பணத்தை யோபுசரவணனிடம் கேட்டு வந்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் யோபுசரவணன் தனது வங்கி காசோலையை (செக்) கொடுத்துள்ளார். அவர்கள் காசோலையை வங்கி கணக்கில் போட்டபோது பணம் இல்லாமல் திரும்பியது.

இதனையடுத்து குடியாத்தம் அசோக்நகரை சேர்ந்த ராஜேந்திரன், நடுப்பேட்டை காந்திரோடை சேர்ந்த தயாளன் ஆகியோர் யோபுசரவணன் மீது ரூ.4 லட்சம் செக் மோசடி செய்து விட்டதாக ஒரு வழக்கையும், குடியாத்தம் பிச்சனூர் குப்பன்னசெட்டி தெருவை சேர்ந்த பாண்டியன், ஆணைகட்டி கணபதி தெருவை சேர்ந்த வாசு, ஆனந்தன் ஆகியோர் யோபுசரவணன் மீது ரூ.4 லட்சம் செக் மோசடி செய்து விட்டதாக ஒரு வழக்கையும் குடியாத்தம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த 2007-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது யோபுசரவணன் 2008-ம் ஆண்டு முதல் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் 2016-ம் ஆண்டு குடியாத்தம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு சார்பில் யோபுசரவணனை தலைமறைவாக உள்ள நபர் என அறிவிக்கை செய்தது. ஆனாலும் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

இந்த வழக்கில் இறுதிவிசாரணை சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. மாஜிஸ்திரேட்டு செல்லபாண்டியன் வழங்கிய தீர்ப்பில் ராஜேந்திரன், தயாளன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் யோபுசரவணனுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனையும், அபராதமாக காசோலையின் 2 மடங்கு தொகையான ரூ.8 லட்சத்தை புகார்தாரர்களுக்கு அளிக்க உத்தரவிட்டார். தவறும்பட்சத்தில் மேலும் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அதேபோல் பாண்டியன், வாசு, ஆனந்தன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் யோபுசரவணனுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனையும், அபராதமாக காசோலையின் 2 மடங்கு தொகையான ரூ.8 லட்சத்தை புகார்தாரர்களுக்கு அளிக்க உத்தரவிட்டார். தவறும்பட்சத்தில் மேலும் 6 ஆண்டு சிறைதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Next Story