வடகிழக்கு பருவமழையில் இருந்து நெற்பயிர்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - கலெக்டர் சிவன்அருள் அறிக்கை


வடகிழக்கு பருவமழையில் இருந்து நெற்பயிர்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - கலெக்டர் சிவன்அருள் அறிக்கை
x
தினத்தந்தி 3 Dec 2019 10:30 PM GMT (Updated: 3 Dec 2019 7:33 PM GMT)

வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தில் இருந்து நெற்பயிர்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் ம.ப.சிவன்அருள் அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர், 

பருவ மழையினால் பயிர்கள் மூழ்கும்போது, தாழ்வான பகுதிகளை இனம் கண்டு வயல்களில் தண்ணீரினை வடிக்க விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வயலில் தேங்கும் நீரை ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்து விட வேண்டும். வடிகால் வாய்க்கால்கள் தண்ணீர் தேங்காமல் வடிந்திடும் வகையில் பொதுப்பணித் துறையினரை அணுகி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழைநீரில் மூழ்கியுள்ள பயிர்களை பாதுகாக்க வயலில் தேங்கும் நீரை ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்து விட வேண்டும். இளம் பயிர்கள் அதிக நாட்கள் நீரின் தேக்கத்தினால் தழை மற்றும் ஜிங்க் சத்துக்கள் குறைபாடு ஏற்பட்டு இளமஞ்சள் அல்லது மஞ்சளாக மாறும் பட்சத்தில் தண்ணீரை வடித்தவுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைவழி உரமிட வேண்டும்.

பயிர் தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் தண்ணீர் தேக்கத்தினால் பாதிக்கப்பட்டால் 4 கிலோ டி.ஏ.பி.யினை 10 லிட்டர் நீரில் முந்தைய நாள் மாலை வேளையில் கரைத்து மறுநாள் வடிகட்டி அதனுடன் 2 கிலோ யூரியாவினை 190 லிட்டர் நீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம் இலைவழி உரமிட வேண்டும்.

தண்ணீர் தேக்கத்தினால் பயிர் வளர்ச்சி குன்றி காணப்பட்டால் தண்ணீரை வடித்தவுடன் ஏக்கருக்கு யூரியா 22 கிலோவுடன், ஜிப்சம் 18 கிலோ மற்றும் வேப்பம் புண்ணாக்கு 4 கிலோவினை ஒருநாள் இரவு கலந்து வைத்து 17 கிலோ பொட்டா‌‌ஷ் கலந்து மேலுரமிட வேண்டும்.

நெற்பயிர் அதிக நாட்கள் நீரில் மூழ்கும் பட்சத்தில் நெல் குருத்து ஈ, இலை சுருட்டுப் புழு, பச்சை தத்துப்பூச்சி, குலைநோய், இலை உரை கருகல் நோய் போன்ற பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கண்டறிந்து தக்க பூச்சி நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இளம் பயிர்களில் தண்ணீர் தேங்கி அழுகிய நிலை ஏற்பட்டிருப்பின் இருப்பில் உள்ள நாற்றுகளை கொண்டு ஊடு நடவு செய்ய வேண்டும் அல்லது அதிக குத்துக்கள் உள்ள நடவு பயிரினை கலைத்து பயிர் இல்லாத இடங்களில் நடவு செய்திட வேண்டும்.

தண்ணீர் தேங்கக்கூடிய இடங்களில் தண்ணீர் தேக்கத்தினை தாங்கி வளரக்கூடிய ரகங்களான சுவர்ணா சப்-1, சி.ஆர். 1009 சப்-1 போன்ற ரகங்கள் நடவு செய்ய வேண்டும்.

இதுதவிர இயற்கை இடர்பாடுகளினால் பயிர் சேதத்தினை ஈடு செய்திட பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் கடன் காப்பீடு மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story