தஞ்சையில் தொடரும் மழை அதிகபட்சமாக அணைக்கரையில் 49 மி.மீட்டர் பதிவு


தஞ்சையில் தொடரும் மழை அதிகபட்சமாக அணைக்கரையில் 49 மி.மீட்டர் பதிவு
x
தினத்தந்தி 3 Dec 2019 11:00 PM GMT (Updated: 3 Dec 2019 8:08 PM GMT)

தஞ்சையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அணைக்கரையில் 49 மி.மீட்டர் மழை பதிவானது.

தஞ்சாவூர்,

வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சையில் நேற்றுகாலை முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தஞ்சை மாவட்டத்தில் துரையுண்டார்கோட்டை, வரவுக்கோட்டை, நாயக்கன்கோட்டை, வாண்டையார் இருப்பு, காட்டூர், கரைமீண்டார்கோட்டை, நல்லவன்னியன்குடிகாடு, சக்கரசாமந்தம், சித்திரைக்குடி, சொக்கனாவூர், புளியக்குடி, பெரியகோட்டை உள்பட பல கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

வடியும் தண்ணீர்

நேற்று பெரியஅளவில் மழை பெய்யாததால் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் களிமேடு, கரம்பயம், கள்ளப்பெரம்பூர், பள்ளியக்கிரஹாரம் பகுதிகளில் வயல்களில் தண்ணீர் தேங்காமல் பயிர்கள் செழித்து பச்சைபசேல் என காட்சி அளிக்கிறது.

மழைக்கு தாக்குப்பிடிக்காமல் தற்காலிக பஸ் நிலையத்தில் சிறிய, சிறிய பள்ளங்கள் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது. கீழவாசல் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமாக காட்சி அளிக்கிறது.

மீன்பிடி தொழில் பாதிப்பு

அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார கடலோர கிராமங்களில் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நிலப்பரப்பை விட கடல் பகுதியில் அதிக அளவு மழை பெய்து வருவதால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியவில்லை என மீனவர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏரிப்புறக்கரையை சேர்ந்த கடல் மீனவர் கூட்டுறவு சங்க துணை தலைவர் ராஜா கூறியதாவது:- புயல் எச்சரிக்கை, கடல் சீற்றம், கன மழை என கடந்த சில மாதங்களாக அதிராம்பட்டினம் பகுதியில் மீன்பிடி தொழில் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் போதிய வருவாய் இன்றி வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கும்பகோணம்

கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக சோழன்மாளிகை பகுதியில் வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் சுமார் 500 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இந்த பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மஞ்சள், வெண்டை, பீர்க்கங்காய் உள்ளிட்ட பல்வேறு பயிர்களில் தண்ணீர் தேங்கிஉள்ளது. இதனால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே வயலில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.

அம்மாப்பேட்டை பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக 9 கூரை வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. அருந்தவபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட திருக்கோவில்பத்து கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த கலியபெருமாள் வீட்டில் வளர்த்து வந்த பசு மாடும் மழையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது.

திருவையாறு

திருவையாறு தாலுகாவில் தொடர் மழை காரணமாக கிராமங்களில் உள்ள குடிசை வீடுகள் மழையில் நனைந்து சேதமடைந்து வருகிறது. திருவையாறு தாசில்தார் இளம்மாருதி அந்தளி, குழிமாத்தூர், கோனேரிராஜபுரம், நடுக்காவேரி, வெள்ளாம்பெரம்பூர், நாகத்தி, கீழத்திருப்பூந்துருத்தி, பெரும்புலியூர், செம்மங்குடி, திருப்பழனம் ஆகிய கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டார். அப்பொழுது மேற்கண்ட ஊர்களில் 13 கூரை வீடுகளும், 3 ஓட்டுவீடுகளும் பகுதி சேதமடைந்துள்ளது தெரியவந்தது. திருவையாறில் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களும் மழையால் பாதிக்கப்பட்டு உள்ளது.

பூதலூர் வட்டாரத்தில் சொரக்குடிபட்டியில் 8 வீடுகளும், பூதலூரில் 5 வீடுகளும், தீட்சசமுத்திரம் ஊராட்சியில் 3 வீடுகளும், சோழகம்பட்டி, ஆற்காடு, கோட்டரப்பட்டி வீரமரசன்பேட்டை, சித்திரகுடிமுதன்மை, ராயந்தூர், ஆகிய கிராமங்களில் தலா 2 வீடுகளும், ஆவாரம்பட்டி, ஒரத்தூர், மனையேரிப்பட்டி ஆகிய கிராமங்களில் தலா 1 வீடும் என உள்பட 32 கூரை வீடுகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீடுகளுக்கு அரசு வழங்கும் நிவாரண உதவிகளை மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்ற பின்னர் வழங்கப்படும் என்று பூதலூர் தாசில்தார் சிவக்குமார் தெரிவித்தார்.

மழைஅளவு

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

அணைக்கரை-49, வெட்டிக்காடு-35, பாபநாசம்-30, கும்பகோணம்-27, திருவிடைமருதூர்-26, மஞ்சளாறு-23, அய்யம்பேட்டை-15, வல்லம்-14, தஞ்சை-12, கல்லணை-11, அதிராம்பட்டினம்-11, குருங்குளம்-10, பேராவூரணி-10, மதுக்கூர்-10, பட்டுக்கோட்டை-6, திருக்காட்டுப்பள்ளி-6, பூதலூர்-2, நெய்வாசல்தென்பாதி-2, ஒரத்தநாடு-1, ஈச்சன்விடுதி-1.

Next Story