கரூர் அருகே துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து; ரூ.20 கோடி மின்மாற்றி எரிந்து நாசம்


கரூர் அருகே துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து; ரூ.20 கோடி மின்மாற்றி எரிந்து நாசம்
x
தினத்தந்தி 3 Dec 2019 11:15 PM GMT (Updated: 3 Dec 2019 8:12 PM GMT)

கரூர் அருகே புகளூரில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.20 கோடி மதிப்பிலான மின்மாற்றி தீயில் எரிந்து நாசமடைந்தது.

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம், புகளூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்திற்கு (டி.என்.பி.எல்.) அருகே தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 230 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின்நிலையம் உள்ளது. இங்கிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கரூர், குளித்தலை மற்றும் நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக அங்கு 3 தானியங்கி மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்) அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 3-வது மின்மாற்றியில் நேற்று காலை 10 மணியளவில் ஆயில் கசிவு ஏற்பட்டது. பின்னர் அந்த மின்மாற்றியில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அந்த மின்மாற்றிக்குள் சுமார் 45 ஆயிரம் லிட்டர் ஆயில் இருந்ததால், கரும் புகையுடன் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

அதிகாரிகள்

இதுகுறித்து செயற்பொறியாளர் முருகேசன், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் புகளூர், கரூர் மற்றும் டி.என்.பி.எல்., கொடுமுடி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், முதலில் எரிந்து கொண்டிருந்த மின்மாற்றியின் மீது நுரையை பீய்ச்சி அடித்தனர். எனினும் தீயை அணைக்க முடியவில்லை.

இதற்கிடையே கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் மற்றும் வருவாய் அதிகாரி ராஜேந்திரன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, தீயணைப்புத்துறையின் மத்திய மண்டல துணை இயக்குனர் மீனாட்சி, மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் கே.ஜி.விவேகானந்தன்(கரூர்), புளுகாண்டி(திருச்சி), கரூர் மாவட்ட உதவி அலுவலர் கணேசன் மற்றும் கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விஜயகுமார், திருமுருகன், மின் வாரிய செயற்பொறியாளர் செந்தாமரை, உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், புகளூர் தாசில்தார் சிவக்குமார், டி.என்.பி.எல். பொது மேலாளர் பட்டாபிராமன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

அப்போது மின்வாரிய அதிகாரிகள் தீ விபத்து ஏற்பட்ட மின்மாற்றியை செயல் இழக்க செய்தனர். மேலும், அங்குள்ள மின் கம்பிகளிலும் தீப்பற்றியதால் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ரூ.20 கோடி மின்மாற்றி எரிந்து நாசம்

மின்மாற்றியில் தீப்பற்றி எரிவதை பார்க்க பொதுமக்கள் பலர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் வெளியேற்றினர். சுமார் 3½ மணி நேர போராட்டத்திற்கு பிறகு துணை மின்நிலைய மின்மாற்றியில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் மின்மாற்றியானது முற்றிலும் எரிந்து நாசம் அடைந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.20 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த தீ விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலெக்டர் பேட்டி

இந்த தீ விபத்து குறித்து மாவட்ட கலெக்டர் அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், புகளூரில் உள்ள துணை மின் நிலையத்தில் 3 தானியங்கி மின்மாற்றிகள் உள்ளன. அதில், 100 எம்.வி.ஏ. தானியங்கி மின்மாற்றியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் உயிர்சேதம் ஏற்படவில்லை. தமிழக அரசின் தீயணைப்புத்துறை வீரர்கள், காகிதஆலை நிறுவனத்தின் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 55 பேர் தொடர்ந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்தின் காரணமாக மேற்கண்ட மாவட்டங்களில் மின்வினியோகம் பாதிக்கப்படாமல், மீதமுள்ள மின்மாற்றிகள் மூலம் மின்வினியோகம் கிடைக்க மின்சார வாரிய அலுவலர்கள் தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த தீ விபத்து குறித்து மின்சார வாரிய தொழில்நுட்ப அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்று கூறினார்.


Next Story