முதல், 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்கள் எவை? கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி


முதல், 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்கள் எவை? கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
x
தினத்தந்தி 3 Dec 2019 10:15 PM GMT (Updated: 3 Dec 2019 8:28 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல், 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்கள் விவரங்களை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். இதுகுறித்து அவர் நேற்று காலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27, 30-ந் தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. இதற்கான தேர்தல் அறிவிக்கை வருகிற 6-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 174 வார்டு உறுப்பினர், 17 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், 403 பஞ்சாயத்து தலைவர், 2 ஆயிரத்து 943 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஆக மொத்தம் 3 ஆயிரத்து 537 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக 1,542 பதவிகளுக்கும், 2-வது கட்டமாக 1,995 பதவிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.

முதல்கட்டமாக தூத்துக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கும், 2-வது கட்டமாக கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

முதல்கட்ட தேர்தலில் தூத்துக்குடி ஒன்றியத்தில் 87 ஆயிரத்து 883 வாக்காளர்களும், கருங்குளம் ஒன்றியத்தில் 69 ஆயிரத்து 525 வாக்காளர்களும், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்தில் 56 ஆயிரத்து 686 வாக்காளர்களும், ஆழ்வார்திருநகரி ஒன்றியத்தில் 63 ஆயிரத்து 574 வாக்காளர்களும், திருச்செந்தூர் ஒன்றியத்தில் 26 ஆயிரத்து 198 வாக்காளர்களும், உடன்குடி ஒன்றியத்தில் 45 ஆயிரத்து 411 வாக்காளர்களும், சாத்தான்குளம் ஒன்றியத்தில் 52 ஆயிரத்து 189 வாக்காளர்களும் உள்ளனர். மொத்தம் 1 லட்சத்து 97 ஆயிரத்து 185 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 4 ஆயிரத்து 256 பெண் வாக்காளர்கள், 25 திருநங்கைகள் ஆக மொத்தம் 4 லட்சத்து 1,466 பேர் வாக்களிக்க உள்ளனர்.இவர்கள் வாக்களிக்க வசதியாக 824 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் பணிக்காக 6 ஆயிரத்து 695 தேர்தல் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். முதல்கட்ட தேர்தலை நடத்துவதற்காக 15 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 221 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

2-வது கட்ட தேர்தல் நடைபெறும் கோவில்பட்டி ஒன்றியத்தில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 221 வாக்காளர்களும், கயத்தார் ஒன்றியத்தில் 68 ஆயிரத்து 872 வாக்காளர்களும், ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் 1 லட்சத்து 434 வாக்காளர்களும், விளாத்திகுளம் ஒன்றியத்தில் 67 ஆயிரத்து 36 வாக்காளர்களும், புதூர் ஒன்றியத்தில் 52 ஆயிரத்து 128 வாக்காளர்களும் உள்ளனர். மொத்தம் 1 லட்சத்து 97 ஆயிரத்து 248 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 3 ஆயிரத்து 433 பெண் வாக்காளர்கள், 10 திருநங்கைகள் ஆக மொத்தம் 4 லட்சத்து 691 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 994 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தல் பணிக்காக 8 ஆயிரத்து 188 பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 2-ம் கட்ட தேர்தலை நடத்துவதற்காக 11 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 303 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள ஊரகப்பகுதிகளில் மட்டும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து உள்ளன. மாவட்டம் முழுவதும் 540 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக போலீசார் அடையாளம் கண்டறிந்து உள்ளனர். அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதலாக நுண் தேர்தல் பார்வையாளர், வெப்கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சக்கரநாற்காலிகள் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஊரகப்பகுதிகளில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடக்கிறது. மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிற வாக்குச்சீட்டும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு பச்சை நிற வாக்குச்சீட்டும், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒரு வார்டு வாக்குச்சாவடியில் வெள்ளை நிற வாக்குச்சீட்டும், இருவார்டு வாக்குச்சாவடிகளில் வெள்ளை மற்றும் நீல நிற வாக்குச்சீட்டும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணிக்கை அடுத்த மாதம்(ஜனவரி) 2-ந் தேதி நடக்கிறது. அதன்பிறகு மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர், 12 ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர், 403 பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடக்கிறது.இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

அப்போது, கூடுதல் கலெக்டர் (வருவாய்) வி‌‌ஷ்ணுசந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத் சிங் கலோன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) சந்திரசேகர் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story