நெல்லையில் பரபரப்பு: தாறுமாறாக ஓடிய லாரி மோதி 4 லோடு ஆட்டோக்கள் சேதம் - தொழிலாளி உள்பட 2 பேர் காயம்


நெல்லையில் பரபரப்பு: தாறுமாறாக ஓடிய லாரி மோதி 4 லோடு ஆட்டோக்கள் சேதம் - தொழிலாளி உள்பட 2 பேர் காயம்
x
தினத்தந்தி 3 Dec 2019 10:15 PM GMT (Updated: 3 Dec 2019 8:28 PM GMT)

நெல்லையில் தாறுமாறாக ஓடிய லாரி மோதி 4 லோடு ஆட்டோக்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. தொழிலாளி உள்பட 2 பேர் காயமடைந்தனர்.

நெல்லை,

நெல்லை டவுன்- தச்சநல்லூர் ரோட்டில் நயினார்குளம் காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு அதிகாலையில் வெளிமாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் காய்கறிகள் கொண்டு வரப்படும். இதேபோன்று இங்கிருந்து கேரளா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு லாரிகளில் காய்கறி ஏற்றி அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

நேற்று அதிகாலையில் மராட்டியத்தில் இருந்து வெங்காயம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நயினார்குளம் மார்க்கெட் அருகே வந்தது. இந்த லாரியை திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த டிரைவர் மனுவேல் (வயது 22) ஓட்டி வந்தார். லாரி மார்க்கெட் அருகில் வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

இதில் சாலையோரம் நின்று கொண்டு இருந்த 4 லோடு ஆட்டோக்கள் மீது ஒன்றன் பின் ஒன்றாக லாரி மோதியது. அதன்பிறகு அங்கு நின்ற 3 மோட்டார் சைக்கிள்கள் மீதும் மோதி நிற்காமல் சென்று அங்கிருந்த டீ கடையின் முகப்பில் மோதிவிட்டு, அதன் அருகில் நின்ற மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில் லோடு ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் பலத்த சேதம் அடைந்தன.

இந்த விபத்தில் ராமையன்பட்டியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி முத்துப்பாண்டி (59), ஆனந்தபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (22) ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், லாரி டிரைவர் மனுவேலுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது தான் விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் மனுவேலை கைது செய்து, அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த லாரியில் வந்த மற்றொரு டிரைவர் மணிகண்டனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நயினார்குளம் மார்க்கெட் முன்பு நடந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story