“என் சாவுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்” தற்கொலை செய்த தறிப்பட்டறை உரிமையாளரின் உருக்கமான கடிதம் சிக்கியது


“என் சாவுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்” தற்கொலை செய்த தறிப்பட்டறை உரிமையாளரின் உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 3 Dec 2019 11:15 PM GMT (Updated: 3 Dec 2019 9:25 PM GMT)

தற்கொலை செய்துகொண்ட தறிப்பட்டறை உரிமையாளர் ஒருவர் “என் சாவுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்”, என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாணிக்கம்பாளையம் சக்திநகரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 42). இவர் தறிப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கனகராஜ் மனவேதனையுடன் காணப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை 10 மணிஅளவில் கனகராஜ் ஈரோடு மொக்கையம்பாளையத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்குள்ள ஒரு கிணற்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, கனகராஜ் கிணற்றில் குதித்தார். ஆனால் அவர் கிணற்றில் குதித்த சம்பவம் யாருக்கும் தெரியவில்லை.

மாலை 6 மணிஅளவில் கேட்பாரின்றி மோட்டார் சைக்கிள் நிற்பதை பார்த்த பொதுமக்கள் அக்கம் பக்கத்தில் விசாரணை நடத்தினர். அப்போது அங்குள்ள மூதாட்டி ஒருவரிடம் கனகராஜ் தனது ‘மணிபர்சை’ கொடுத்து இருந்தது தெரியவந்தது. அதன்பிறகு, கனகராஜ் கிணற்றில் குதித்த விவரமும் பொதுமக்களுக்கு தெரியவந்துள்ளது.

போலீஸ் விசாரணை

இதையடுத்து பொதுமக்கள் ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கும், வீரப்பன்சத்திரம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள், கிணற்றில் மிதந்த கனகராஜின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதையடுத்து கனகராஜின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்த கனகராஜூக்கு வனிதா (38) என்ற மனைவியும், கீர்த்திகா (19) என்ற ஒரு மகளும், சுதர்சன் (16) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

கடிதம் சிக்கியது

இந்தநிலையில் கனகராஜ் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்த கடிதம் போலீசில் சிக்கியது. அந்த கடிதத்தில், “என் இனிய அன்பு நண்பர்களே, ஜவுளி தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என்னுடைய மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்” என்று எழுதப்பட்டு இருந்தது.

இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், உற்பத்தி செய்யப்பட்ட துணியின் விலை திடீரென குறைந்ததால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதும், அதனால் மனவேதனையுடன் காணப்பட்ட கனகராஜ் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. 

Next Story