சிக்பள்ளாப்பூரில், வாக்காளர்களுக்கு கறிக்கோழிகள் வினியோகித்து ஓட்டுவேட்டை - தேர்தல் அதிகாரிகள் விசாரணை


சிக்பள்ளாப்பூரில், வாக்காளர்களுக்கு கறிக்கோழிகள் வினியோகித்து ஓட்டுவேட்டை - தேர்தல் அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 3 Dec 2019 11:21 PM GMT (Updated: 3 Dec 2019 11:21 PM GMT)

சிக்பள்ளாப்பூரில், பகிரங்க பிரசாரத்திற்கான கடைசி நாளான நேற்று புது விதமாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். அதாவது, வாக்காளர்களுக்கு சிலர் கறிக்கோழிகளை வினியோகித்து ஓட்டுவேட்டை நடத்தினர். இதுபற்றி தேர்தல் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

சிக்பள்ளாப்பூர்,

கர்நாடகத்தில் காலியாக உள்ள 15 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை(வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பகிரங்க பிரசாரம் நேற்றுடன் முடிந்தது. இன்று(புதன்கிழமை) ஓய்வு நாள் ஆகும். நாளை காலை 7 மணிக்கு 15 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. இந்த நிலையில் பகிரங்க பிரசாரத்திற்கான கடைசி நாளான நேற்று வாக்காளர்களை கவர வேட்பாளர்களும், அவரது ஆதரவாளர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள், அசைவ விருந்து உள்ளிட்டவற்றை வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்து இருந்தாலும் மறைமுகமாக வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள், பிரியாணி பொட்டலங்கள், மது பாட்டில்கள் ஆகியவை கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிக்பள்ளாப்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு அசைவ விருந்து மற்றும் பிரியாணி பொட்டலங்கள் கொடுப்பதற்கு பதிலாக புதுவிதமாக ஓட்டுவேட்டை நடத்தினர். அதாவது வாக்காளர்களுக்கு நேரடியாக உயிருடன் கறிக்கோழிகளை வினியோகித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். சிக்பள்ளாப்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சிக்கபைலகுர்கி, தொட்டபைலகுர்கி, சாமசேவனஹள்ளி உள்ளிட்ட கிராமங்களில் வாக்காளர்களுக்கு கறிக்கோழி வினியோகம் படுஜோராக நடந்ததாக கூறப்படுகிறது.

ஆட்டோக்களில் கறிக்கோழிகளை சிலர் கொண்டு சென்று வாக்காளர்களுக்கு வினியோகித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் சுதாகர், காங்கிரஸ் சார்பில் அஞ்சனப்பா, ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் ராதாகிருஷ்ணா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். ஆனால் இதில் எந்த வேட்பாளருக்கு ஆதரவாக கறிக்கோழிகளை வினியோகித்து வாக்காளர்களிடம் ஓட்டுவேட்டை நடத்தினர் என்று தெரியவில்லை.

இதுதொடர்பாக சிக்பள்ளாப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story