15 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு: இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது - கடைசி நாளில் தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டை


15 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு: இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது - கடைசி நாளில் தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டை
x
தினத்தந்தி 3 Dec 2019 11:44 PM GMT (Updated: 3 Dec 2019 11:44 PM GMT)

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. கடைசி நாளில் தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில், 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர்.

இதனால் 14 மாதங்களே நீடித்த குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் கர்நாடக சட்டசபையில் 17 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள அதானி, காக்வாட், கோகாக், எல்லாப்பூர், இரேகெரூர், ராணிபென்னூர், விஜயநகர், சிக்பள்ளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜி நகர், ஒசக்கோட்டை, கே.ஆர்.பேட்டை, உன்சூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் 5-ந் தேதி (அதாவது நாளை) இடைத்தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் போட்டியிட 248 வேட்பாளர்கள் 355 மனுக்களை தாக்கல் செய்தனர். சட்டப்படி இல்லாத 54 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 53 வேட்பாளர்கள் தங்களின் மனுக்களை வாபஸ் பெற்றனர். அது போக தற்போது, தேர்தல் களத்தில் 165 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 156 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவார்கள்.

தொகுதிவாரியாக பார்த்தால், அதானி தொகுதியில் 8 வேட்பாளர்கள், காக்வாட்டில் 9 பேர், கோகாக்கில் 11 பேர், எல்லாப்பூரில் 7 பேர், இரேகெரூரில் 9 பேர், ராணிபென்னூரில் 9 பேர், விஜய நகரில் 13 பேர், சிக்பள்ளாப் பூரில் 9 பேர், கே.ஆர்.புரத் தில் 13 பேர், யஷ்வந்தபுரத் தில் 12 பேர், மகாலட்சுமி லே-அவுட்டில் 12 பேர், சிவாஜிநகரில் 19 பேர், ஒசக்கோட்டையில் 17 பேர், கே.ஆர்.பேட்டையில் 7 பேர், உன்சூரில் 10 பேர் என மொத்தம் 165 பேர் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். இவற்றில் அதிகபட்சமாக சிவாஜிநகரில் 19 பேரும், குறைந்தபட்சமாககே.ஆர்.பேட்டையில் 7 பேரும் போட்டியில் உள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த 319 பறக்கும் படைகள், 578 நுண்ணிய கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 8,326 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 8,186 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 7,876 வி.வி.பேட் எந்திரங்கள் (யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரங்கள்) பயன்படுத்தப்படுகின்றன. இந்த 15 தொகுதிகளில் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் மொத்தம் 37 லட்சத்து 77 ஆயிரத்து 970 வாக்காளர்கள் ஆவர்.

இவர்களில் ஆண் வாக்காளர்கள் 19 லட்சத்து 25 ஆயிரத்து 529 பேரும், பெண் வாக்காளர்கள் 18 லட்சத்து 52 ஆயிரத்து 27 பேரும் உள்ளனர். திருநங்கை வாக்காளர்களின் எண்ணிக்கை 414 ஆகும். வாக்காளர்கள் அடையாள அட்டையை காட்டி ஓட்டுப்போட வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள், பாஸ்போர்ட்டு உள்பட 11 ஆவணங் களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்களிக்க முடியும். இந்த 15 தொகுதிகளில் 4 ஆயிரத்து 185 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. 22 ஆயிரத்து 958 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்த 15 தொகுதிகளில், பா.ஜனதா சார்பில் 13 தொகுதிகளில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களும், சிவாஜிநகரில் எம்.சரவணா, ராணிபென்னூரில் அருண்குமார் புஜார் ஆகியோரும் களம் இறக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் புதிய முகங்களை களம் இறக்கியுள்ளது. குறிப்பாக காக்வாட் தொகுதியில் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த ராஜூ காகே போட்டியிடுகிறார். கோகாக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் லகன் ஜார்கிகோளியும், சிவாஜிநகரில் ரிஸ்வான் ஹர்ஷத்தும் போட்டியிடுகிறார்கள்.

ஜனதா தளம்(எஸ்) கட்சி, யஷ்வந்தபுரத்தில் ஜவராயிகவுடா, கோகாக்கில் அசோக் பூஜாரி உள்ளிட்டோரை களம் இறக்கியுள்ளது. ஒசக்கோட்டையில் பா.ஜனதா வேட்பாளர் எம்.டி.பி.நாகராஜ் சுமார் ரூ.1,200 கோடி சொத்து மதிப்புடன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் கூட்டணி அரசில் வீட்டு வசதித்துறை மந்திரியாக இருந்தவர். அந்த தொகுதியில் பா.ஜனதாவை சேர்ந்த பச்சேகவுடா எம்.பி.யின் மகன் சரத் பச்சேகவுடா சுயேச்சையாக போட்டியிட்டு, பா.ஜனதா, காங்கிரசுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்த இடைத்தேர்தல் முடிவு மாநில பா.ஜனதா அரசின் எதிர்காலத்தை நிர்ணயிக்க உள்ளதால், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதனால் முதல்-மந்திரி எடியூரப்பா அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து 2 கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார். அவர் தனது பிரசாரத்தில் முக்கியமாக பேசுகையில், “தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களை வெற்றி பெற செய்தால், அவர்களை மந்திரி ஆக்குவேன். வளர்ச்சியில் 15 தொகுதிகளையும் முன்மாதிரியாக தொகுதிகளாக மாற்றுவேன். எனது தலைமையிலான பா.ஜனதா அரசு நிலையை ஆட்சி நிர்வாகத்தை நடத்த ஆதரிக்க வேண்டும்“ என்று கேட்டுக் கொண்டார்.

பா.ஜனதா சார்பில் எடியூரப்பா மட்டுமின்றி மந்திரிகள், பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், மத்திய மந்திரிகள் சதானந்தகவுடா, பிரகலாத்ஜோஷி, சுரேஷ் அங்கடி உள்ளிட்டோரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பா.ஜனதாவின் மாநில அளவிலான நிர்வாகிகளும் களத்தில் பம்பரமாய் சுழன்று வாக்கு சேகரித்தனர்.

அதே போல் காங்கிரஸ் சார்பில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார். ஒரு தொகுதியில் ஒரு நாள் வீதத்தில் அவர் பிரசார பயணத்தை வகுத்து அதன்படி, தினமும் ஒரே தொகுதியில் 4, 5 இடங்களில் வாக்கு சேகரித்தார். அவர் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களை கடுமையாக தாக்கி பேசினார். அவரது பேச்சு இடைத்தேர்தல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

குறிப்பாக அவர் பேசுகையில், “தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் 15 பேரும் பா.ஜனதாவுக்கு குதிரை பேரம் மூலம் விற்பனையானவர்கள். சந்தையில் ஆடு, கோழி, மாடுகளை போல் விற்பனையாகியுள்ள அத்தகையவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். இதன் மூலம் அரசியலை தூய்மைப்படுத்த வேண்டும். வாக்காளர்களுக்கு பா.ஜனதா பணம் பட்டுவாடா செய்கிறது. பணத்தை வாங்கி கொண்டு காங்கிரசுக்கு வாக்களியுங்கள்“ என்று பேசினார்.

மேலும் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் அக்கட்சியின் மாநில அளவிலான நிர்வாகிகள் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். அதே போல் ஜனதா தளம்(எஸ்) சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் முன்னாள் மந்திரிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்த பிரசாரத்தில் பேசிய குமாரசாமி, “15 தொகுதிகளிலும் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களை தோற்கடிக்க வேண்டும். ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்பட்டு, பணம் வாங்கி கொண்டு பா.ஜனதாவுக்கு விலைபோன அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். இதன் மூலம் கர்நாடக அரசியலை மக்கள் தூய்மைபடுத்த வேண்டும்“ என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில் இடைத்தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று முன்தினம் அதானி தொகுதியில் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை முடித்துக் கொண்டார். அவர் நேற்று எங்கும் பிரசாரம் செய்யவில்லை. சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உன்சூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அதன் பிறகு மாலையில் கே.ஆர்.பேட்டையில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து தனது இறுதி பிரசாரத்தை நிறைவு செய்தார்.

அதே போல் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் தொகுதியில் தனது இறுதி பிரசாரத்தை மேற்கொண்டார். அங்கு ஜனதா தளம்(எஸ்) வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய அவர், பிரசாரத்தை நிறைவு செய்து கொண்டார். முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார், யஷ்வந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி பிரசாரத்தை முடித்துக் கொண்டார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒசக்கோட்டையில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். மத்திய மந்திரி சதானந்தகவுடா சிக்பள்ளாப்பூரில் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி பிரசாரத்தை நிறைவு செய்தார்.

மொத்தத்தில் கடைசி நாளில் தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பரபரப்புடன் காணப்பட்ட சட்டசபை இடைத்தேர்தல் களம் நேற்று மாலை 6 மணிக்கு மேல் சற்று அமைதியானது. ஆட்டோ மற்றும் வாகனங்களில் வாக்குகளை கேட்டு வந்த கூம்புவடிவ ஒலிபெருக்கிகள் ஒலியை நிறுத்திக்கொண்டன.

15 தொகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் 3 நாட்கள் இடைவெளிக்கு பிறகு வருகிற 9-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்த இடைத்தேர்தலில் ஆளும் பா.ஜனதா அரசு பெரும்பான்மை பலத்தை பெற இன்னும் 6 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற்றே தீரவேண்டும். இல்லாவிட்டால் அக்கட்சி மெஜாரிட்டியை இழந்து ஆட்சியை பறிகொடுத்துவிடும் நிலை உள்ளது.

Next Story