நெல்லை மாவட்டத்தில் குடிமராமத்து பணியால் பெரும்பாலான குளங்கள் நிரம்பின - கலெக்டர் ஷில்பா தகவல்


நெல்லை மாவட்டத்தில் குடிமராமத்து பணியால் பெரும்பாலான குளங்கள் நிரம்பின - கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 4 Dec 2019 10:30 PM GMT (Updated: 4 Dec 2019 1:09 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் குடிமராமத்து பணியால் பெரும்பாலான குளங்கள் நிரம்பி உள்ளன என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

நெல்லை, 

விவசாயிகள் பயன்பெறும் வகையில் பொதுப்பணித்துறையின் மூலமாக நீர் வள ஆதாரங்களை செம்மைபடுத்துவதற்காக தமிழகம் முழுவதும் ரூ.499 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் பல்வேறு குளங்கள், ஏரிகள், கால்வாய்கள் தூர்வாரப்பட்டன.

இந்த திட்டத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் ரூ.43 கோடியே 25 லட்சம் மதிப்பில் நீர்நிலைகளை பாதுகாத்திட விவசாயிகளை கொண்டே பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. இதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள குளங்களுக்கு, ஏரிகளுக்கு தேவையான பணிகளை குறிப்பாக கரைகளை பலப்படுத்துதல், ஆழப்படுத்துதல், நீர் உள்வரும் மற்றும் வெளிய செல்லும் பாதைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு நீர்நிலைகளை பாதுகாத்து மழைநீர் சேமிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி வடிநில கோட்ட பகுதியில் ரூ.21 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் 84 பணிகளும், தென்காசி பகுதியில் சிற்றாறு வடிநில கோட்ட பகுதியில் ரூ.24 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் 90 பணிகளும், கோதையாறு வடிநில கோட்ட பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ஒரு பணியும், வைப்பாறு வடிநில கோட்ட பகுதியில் 10 பணிகளும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

நெல்லை மாநகர பகுதியில் மட்டும் ரூ.3 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை மூலம் பதிவு பெற்ற பாசன சங்கங்கள், நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள், பாசனதாரர்கள் ஆகியோர்கள் மூலமாக பணிகளை அந்த பகுதி விவசாயிகள் மூலமாக செயல்படுத்தப்பட்டது.

மேலும் ஊராட்சிக்கு உட்பட்ட 118 சிறு பாசன குளங்களிலும், 218 ஊருணிகளிலும் குடிமராமத்து பணிகள் நடைபெற உள்ளது. இதில் 118 சிறு பாசன குளங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதமும், 218 ஊருணிகளில் தலா ரூ.1 லட்சம் வீதம் பணிகள் நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற குடிமராமத்து பணியால் பெரும்பாலான குளங்கள் நிரம்பி உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story