குற்றாலம் அருவிகளில் வெள்ளம் தணிந்தது: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி


குற்றாலம் அருவிகளில் வெள்ளம் தணிந்தது: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
x
தினத்தந்தி 4 Dec 2019 10:15 PM GMT (Updated: 4 Dec 2019 2:55 PM GMT)

குற்றாலம் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளம் தணிந்தது. இதனால் நேற்று அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

தென்காசி, 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 29–ந் தேதி பெய்த பலத்த மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அன்று குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 30–ந் தேதி, 1–ந் தேதி ஆகிய 2 நாட்களில் வெள்ளப்பெருக்கு குறையாததால் தடை நீட்டிக்கப்பட்டது.

கடந்த 2–ந் தேதி அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பழைய குற்றாலத்தில் மட்டும் வெள்ளப்பெருக்கு குறையாததால் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் காலையிலும் வெள்ளப்பெருக்கு குறையவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்த நிலையில் நேற்று தென்காசி பகுதியில் மழை பெய்யவில்லை. இதனால் காலை 6 மணி முதல் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு தணிந்தது. இதனால் அருவிகளில் குளிக்க பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து சென்றனர். 

Next Story