4 நாட்களுக்கு பிறகு, கடலூர் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் - நண்டுகள் அதிகம் சிக்கியதால் மகிழ்ச்சி
கடலூர் துறைமுகத்தில் இருந்து 4 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் வலையில் அதிகளவு நண்டுகள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் முதுநகர்,
கடலூர் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 100-க்கும் அதிகமான விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.
ஆனால் கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடந்த 4 நாட்களாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்றும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இருப்பினும் 50-க்கும் மேற்பட்ட பெரிய ரக விசை படகுகளில் மீன்பிடிக்க மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்றனர். இவர்களில் ஒரு சில மீனவர்கள் நேற்று மதியத்திற்கு மேல் தங்கள் வலைகளில் சிக்கிய மீன்களுடன் கடலூர் துறைமுகத்திற்கு திரும்பினர். இதில் பெரும் பாலும் மீன்களை விட நண்டுகளே அதிகளவில் சிக்கி இருந்தது. இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றதை காண முடிந்தது. இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், கடந்த சில நாட்களாக மீன்கள் வரத்தே இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது கடலுக்கு சென்ற எங்களுக்கு நண்டுகள் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் வருமானமே இல்லாமல் இருந்த எங்களுக்கு நண்டுகள் மூலம் கிடைக்கும் வருவாய் சற்று ஆறுதலை தருகிறது. நேற்று 2 டன் அளவுக்கு நண்டு வந்தது. இதில் பார் நண்டு வகை ஒரு கிலோ ரூ. 25 முதல் 30 வரைக்கும், வெள்ளை நண்டு கிலோ ரூ.70 என்கிற நிலையிலும் விற்பனையாது. கடந்த 2 மாதங்களாகவே தொடர்ச்சியாக நண்டு வரத்து இருந்து வருகிறது. இதுபோன்று இதற்கு முன்பு நண்டு வரத்து இருந்தது கிடையாது என்று அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story