ஓ.என்.ஜி.சி. நிறுவத்தினர் குழாய் சீரமைக்கும் பணியை கண்டித்து 3 கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி


ஓ.என்.ஜி.சி. நிறுவத்தினர் குழாய் சீரமைக்கும் பணியை கண்டித்து 3 கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி
x
தினத்தந்தி 4 Dec 2019 11:00 PM GMT (Updated: 4 Dec 2019 5:05 PM GMT)

கோட்டூர் அருகே ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் குழாய் சீரமைக்கும் பணியை கண்டித்து 3 கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கலைந்து சென்றனர்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே செல்லப்பிள்ளையார் கோட்டகத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எண்ணெய் கிணறு அமைந்துள்ளது. இதில் இருந்து கச்சா எண்ணெய் எடுத்து குழாய் மூலம் நல்லூரில் உள்ள எண்ணெய் கிணறுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது இந்த குழாய் பழுதடைந்தது. இதனால் ஓ.என்.ஜி.சி. நிறுவத்தினர் குழாய் சீரமைக்கும் பணியினை தொடங்கி உள்ளனர். மேலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க போவதாக செய்தி பரவியது. இதனை கண்டித்து அழகிரிகோட்டகம், செல்லப்பிள்ளையார் கோட்டகம், காடுவாகுடி ஆகிய 3 கிராமமக்கள் நேற்று செல்லப்பிள்ளையார் கோட்டகம் ஓ.என்.ஜி.சி. கிணறு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த ஓ.என்.ஜி.சி. காரைக்கால் முதன்மை பொதுமேலாளர் மாறன், கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் காடுவாகுடி தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவது, அழகிரிகோட்டகம் செல்லப்பிள்ளையார் கோட்டகம் கிராமங்களுக்கு மயான சாலை அமைப்பது, 3 கிராமங்களிலும் தனிநபர் கழிவறை கட்டுவது, ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வசதி செய்து கொடுப்பது, இப்பகுதி சாலைகளை மேம்படுத்துவது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடாமல் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story