மணப்பாறை ரெயில் தண்டவாளம் அருகே தடுப்புச்சுவர் அமைக்கப்படுவதை கண்டித்து சாலை மறியல்


மணப்பாறை ரெயில் தண்டவாளம் அருகே தடுப்புச்சுவர் அமைக்கப்படுவதை கண்டித்து சாலை மறியல்
x
தினத்தந்தி 4 Dec 2019 10:45 PM GMT (Updated: 4 Dec 2019 6:55 PM GMT)

மணப்பாறை ரெயில் தண்டவாளம் அருகே தடுப்புச்சுவர் அமைக்கப்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மணப்பாறை,

மணப்பாறையில், திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இதேபோல, ரெயில் தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்லாமல் இருப்பதற்காக சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. ரெயில் தண்டவாளத்தின் மற்றொருபுறம் தான் புகழ் பெற்ற மணப்பாறை மாட்டுச்சந்தை, வாரச்சந்தை, அத்திக்குளம் ஆகியவை உள்ளன. இங்கு வருபவர்கள் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்லாமல் இருப்பதற்காகத்தான் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. ஆனால், அந்த சுரங்கப்பாதையில் மழைநீர் அதிகளவு தேங்கி நிற்கிறது. அந்த தண்ணீரில் கொசுக்கள் அதிகளவு இருப்பதாலும், பாம்பு போன்ற வி‌‌ஷ ஜந்துக்கள் இருப்பதாலும் அந்த பாதை வழியாக பொதுமக்கள் யாரும் செல்வது கிடையாது. இந்த சுரங்கப்பாதையை மக்கள் பயன்படுத்திட ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ரெயில் தண்டவாளத்தைதான் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு தண்டவாளத்தை கடந்து செல்ல முயலும்போது அந்த வழியாக வரும் ரெயில் மோதி அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

சாலை மறியல்

இந்நிலையில், தண்டவாளத்தை கடந்து செல்ல முடியாத வகையில் தண்டவாளத்தின் அருகே தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை ரெயில்வே துறையினர் நேற்று தொடங்கினர். இதனை கண்ட அத்திக்குளம் மற்றும் சுற்றுப்புறங்களை சேர்ந்த பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தண்டவாளம் அருகே தடுப்புச்சுவர் அமைக்கக்கூடாது என்று கோரியும், சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றக்கோரியும் மேம்பாலம் அருகே திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மணப்பாறை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், சுரங்கப்பாதையில் உள்ள மழைநீரை வெளியேற்றக்கோரி நகராட்சி நிர்வாகத்திடம் கூறினால், நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், நெடுஞ்சாலைத் துறையை கேட்டால் அது ரெயில்வே துறையினரிடம் இருப்பதாகவும் கூறி அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சுரங்கப்பாதையை மக்கள் பயன்படுத்த முடியாமல் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, உரிய தீர்வு காணும் வரை மறியலை கைவிட மாட்டோம் என்று கூறினர். அதற்கு போலீசார், உங்கள் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதன்பேரில் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story