செந்துறை அருகே உடைந்த பாசன ஏரி சீரமைப்பு


செந்துறை அருகே உடைந்த பாசன ஏரி சீரமைப்பு
x
தினத்தந்தி 4 Dec 2019 10:15 PM GMT (Updated: 4 Dec 2019 7:01 PM GMT)

செந்துறை அருகே உடைந்த பாசன ஏரி சீரமைக்கப்பட்டது.

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ராயம்புரம் கிராமத்தில் உள்ளது உடையான் ஏரி. பாசன ஏரியான இது சுமார் 12 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை நம்பி ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக செந்துறை பகுதியில் தொடர் மழை பெய்தது. இதைத்தொடர்ந்து ஏரி நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. இந்த நிலையில் பாசனத்திற்காக திறக்கப்படும் மதகு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு ஏரியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரி நீர் வெளியேறி வயல் பகுதியில் பாய்ந்தது. இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள் திரண்டு வந்து அதனை மணல் மூட்டை மூலம் அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சீரமைப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா உடனடியாக அந்த ஏரியின் உடைப்பை சரி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அரியலூர் கோட்டாட்சியர் (பொறுப்பு) பாலாஜி தாசில்தார் கதிரவன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று பொக்லைன் எந்திரம் கொண்டு ஏரியின் உடைப்பை சீரமைத்தனர்.

அதனை தொடர்ந்து அரியலூர் கலெக்டர் ரத்னா சம்பவ இடத்திற்கு சென்று ஏரியில் உடைப்பு ஏற்பட்ட இடத்தினை ஆய்வு செய்து மேலும் இதுபோன்று உடைப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கண்காணிக்க...

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், தமிழக அரசு இந்த ஏரியை சீரமைக்க நிதி ஒதுக்கியது. ஆனால் ஏரியை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்கள் சரிவர சீரமைக்கவில்லை. அதனால் இந்த ஏரி உடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இனிமேல் இதுபோல் நடைபெறாமல் மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதேபோல் செந்துறை அருகே குமிழியம் கிராமத்தில் உள்ள பூ மரத்தான் புலி ஏரியில் பஞ்சாயத்துக்கு சொந்தமான பழமையான கிணறு கனமழையால் சேதம் அடைந்தது. கலெக்டர் ரத்னா அந்தக் கிணற்றை சுற்றி கம்பி வேலி அமைத்து பாதுகாக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அந்த கிணற்றை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டது. இந்த கிணற்றை ஆய்வு செய்ய வந்த கலெக்டரிடம், பொதுமக்கள் கிணற்றை மீண்டும் சீரமைத்து பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் குமிழியம் கிராமத்தின் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து உள்ளது என்றும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மோதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாமல் அவதிப்படுவதாகவும் பொதுமக்கள் கூறினர். உடனடியாக கலெக்டர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.


Next Story